திருநெல்வேலி: திருநெல்வேலியில் கரோனா பொதுமுடக்க காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடைகள் பிடித்தபடி சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு எதிராக 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பது. காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளத்திற்கான அரசாணையை வெளியிடக்கோருவது, தொழிலாளர் நலச்சட்டங்களை வலுவிழக்க செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, பொதுமுடக்கத்தால் வேலையிழந்து தவிக்கும் ஏழை-எளிய மக்களுக்கான திட்டங்களை அறிவிக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலர் மோகன் தலைமை வகித்தார். அகில இந்திய செயலர் கருமலையான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு நிர்வாகிகள் பெருமாள், காமராஜ், நிர்வாகிகள் சுடலைராஜ், வரகுணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடைகள் பிடித்தபடி இடைவெளி விட்டு முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.