கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற இரண்டு பேர் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 10 க்கும் மேலான தொற்று நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை கம்பம் மற்றும் தேவாரத்தை சேர்ந்த இரண்டு பேர் கரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
அவர்களுக்கு காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன், சித்த மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
சித்த மருத்துவர்கள் கூறியது: இந்த ஆரோக்கியம் பெட்டகத்தில் அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகிய இரண்டு மருந்துகளும் அடங்கியுள்ளது
அமுக்கரா மாத்திரை எந்த நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களை அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு உதவி புரியும். உடல் தேற்றி நரம்புகளை வன்மைப்படுத்தும், உடல் அசதியை நீக்கும் மூட்டுவலிகளை குணப்படுத்தும்.
நெல்லிக்காய் லேகியம் பாதிக்கப்பட்ட உடல் செல்களை மறு உருவாக்கம் செய்யும், இதில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் நுரையீரலை பலப்படுத்தும். உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறினார்.