தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிககை காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நிகழாண்டில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து அறிவித்தது.
இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கொடியேற்றினார். பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. கொடியேற்றம், திருப்பலி சமூகவலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பலத்த காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் மக்கள் பங்கேற்பு இல்லாமல்நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.