தேசிய தலைநகர் தில்லியில் தனது மூத்த அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு துணை ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூரைச் சேர்ந்தவர் கர்னெல் சிங்(55), இவர் சிஆர்பிஎஃப் பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்துள்ளார். ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ரத் சிங்(56). இவர் சிஆர்பிஎஃப் பிரிவில் மூத்த ஆய்வாளராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்காளவில் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் தனது மூத்த அதிகாரியான ஆய்வாளர் தஷ்ரத் சிங்கை தனது பாதுகாப்பு ஆயுதத்தால் சுட்டுக்கொன்று விட்டு பின்னர் ஆய்வாளர் கர்னல் சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தகவல் அறிந்து துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.