சென்னை: நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், சிறப்பான, வளமான எதிரிகாலம் அமைய தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"விநாயகனே வெல்வினையே வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்னையினாற்
கண்ணிற் பணிமின் கணிந்து" என்ற பதினொறாம் திருமுறை பாடலை குறிப்பிட்டு, முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ உள்ளிட்ட பல பூக்களுடன், பழங்கள், கரும்பு, அவல் போன்றவற்றை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.
கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.