புது தில்லி : ஏர் ஏசியா இந்தியா விமானத்தில் செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான பயண காலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அடிப்படை கட்டணம் இல்லாமல் 50 ஆயிரம் இடங்கள் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை பயணிகள் தங்கள் விவரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கலாம்.
"ரெட் பாஸ்" சலுகையின் கீழ் அடிப்படை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். அதே வேளையில், விமான நிலையக் கட்டணம் மற்றும் வரிகளை பயணிகளே ஏற்க வேண்டும். மேலும், விமான நிலையத்தில் ”ரெட் பாஸ்” பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டவுடன், ஏர் ஏசியா இந்தியா இயக்கப்படும் எந்தவொரு உள்நாட்டு விமானத்திலும் செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை பயணிக்கலாம்.
ஏர் ஏசியா ரெட் பாஸ் ஒரு வழி விமானத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்காக முன்பதிவு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்னதாகவே செய்யப்பட வேண்டும்.
இந்த வாய்ப்பை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப் படையினர் மற்றும் பயிற்சி வீரர்கள் பெறலாம் என்று கூறியுள்ளனர்.