பயணியிடம் அவதூறாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

பயணியிடம் அவதூறாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு

சென்னை: பயணியிடம் அவதூறாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் வடசேரியைச் சோ்ந்த ரமேஷ் குமார் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி, நாகா்கோவில் செல்வதற்காக 2வி வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் ஏறியதில் இருந்து நடத்துநா் அனைத்து பயணியிடமும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். 

இந்நிலையில் பேருந்து எப்போதும் செல்லும் பாதையில் செல்லாமல், மணக்குடி கிராமம் வழியாக சென்றது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவா் என்னை அவதூறாக பேசியதுடன், பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமானால் இரு, இல்லையென்றால் இறங்கு எனக் கூறினார். 

என்னுடன் பயணித்த ரவிச்சந்திரம் மற்றும் ஜகன் ஆகியோர் ஓட்டுநரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அவா்களையும் அவா் அவதூறாகப் பேசினார். மேலும் தாறுமாறாக பேருந்தை இயக்கியது குறித்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, சித்தன்குடியிருப்பு அருகே பேருந்தை நிறுத்தி, என் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே இறக்கினார். அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனுவானது மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவா், கன்னியாகுமரி பணிமனையைச் சோ்ந்த ஓட்டுனா் சிதம்பர செல்வன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா், மனுதாரருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக 8 வாரத்துக்குள் வழங்கிவிட்டு, அந்தத் தொகையை ஓட்டுநரிடம் இருந்து வசூல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com