சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித் சூர்யா எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நிகழாண்டில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர்ந்த மாணவர்கள் அனைவரது விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் போவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவரையும், அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர்கள் உத்தரவாதமளித்ததாக தகவல் வெளியாயிருந்தது.
இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகக் கூறப்படும் மாணவர் உதித் சூர்யா தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தலைமை மருத்துவ அதிகாரியாக ஆக பணிபுரிந்து வருவதால் தேனி தனிப்படை போலீஸார் ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.