பொள்ளாச்சி: வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் ராக்கெட்டுக்கு தேவையான கார்பன் துணி தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் சோம்நாத் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
ராக்கெட்டுக்கு தேவையான கார்பன் துணி தயாரிக்கும் தொழிற்சாலை அமெரிக்காவில் மட்டும் உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக பொள்ளாச்சியை அடுத்த குளத்துப்பாளையத்தில் தனியார் சார்பில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி சோம்நாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் 14 நாள்கள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில் விக்ரம் லேண்டரை பற்றிய புகைப்படமோ, எந்த தகவலோ இதுவரை கிடைக்கவில்லை.
இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி சி 47, 48 மற்றும் ஜிஎஸ்எல்வி எப் 10 உள்ளிட்ட செயற்கைக் கோள்கள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவிகிதம்தான் இந்தியாவில் உள்ள இஸ்ரோவுக்கு இப்போது கிடைக்கிறது. இருப்பினும் 5 ஆண்டுகளில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடம் வகிக்கும் என்றார்.