போக்குவரத்து விதிகளை மீறியதாக, அதிநவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 8300 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் குறித்து செல்லிடப்பேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம் என பெருநகர காவல்துறை தெரிவித்திருந்ததுடன், சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் GCTP Citizen Services என்ற செல்லிடப்பேசி செயலியை கடந்த ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
இதனிடையே சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை மாத இறுதியில் 5 முக்கிய சந்திப்புகளில் ஏஎன்பிஆர் எனப்படும் 58 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் 24 மணிநேரமும் தானியங்கி முறையில் இயங்கி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம்பிடித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் இந்த தானியங்கி அதிநவீன கேமராக்கள் மூலம், ஒட்டுமொத்தமாக சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதாக, அதிநவீன கேமராக்கள் மூலம் காட்சி படங்களை வைத்து தற்போது வரை சுமார் 8300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.