காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவமழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரண் காட்டி வழக்கம்போல் கையை விரித்தது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணியில் கர்நாடாக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தில்லியில் இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரியில் உடனடியாக நீர் திறந்து விட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தும் என தெரிகிறது. அதோடு மேகதாது விவகாரத்தையும் சுட்டிக்காட்டி வாதிடவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக பொதுப்பணித்துறை செயலர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளும் தில்லி சென்றுள்ளனர்.