கிராமங்களில் தங்குதல் என்ற திட்டத்தின் கீழ் கர்நாடக முதல்வர் குமாரசாமி தங்கும் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள சின்ன குளியலறையை தனது வீட்டுக்கு கொண்டு செல்லப் போவதில்லை என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் "கிராமங்களில் தங்குதல்" என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் குமாரசாமி, கலாபுராகி மாவட்டம் அப்சல்பூர் தாலுக்கா யாத்கிர் அருகே உள்ள சந்திராகி கிராமத்தில் தங்கினார்.
பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து இரவு உணவை அவர் உண்டார். ஆனால் அங்கு குமாரசாமிக்கு 5 நட்சத்திர வசதிகள் செய்து தரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, என்ன 5 நட்சத்திர வசதி என்று கேள்வி எழுப்பியவர். தான் தரையில் கூட படுத்து உறங்க தயார்.
தமக்கு குறைந்தபட்ச வசதிகள் கூட இருக்கக் கூடாதா என்று எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்பிய குமாரசாமி, ஓய்வில்லாவிட்டால் தம்மால் பணிகளை எப்படி கவனிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தனக்காக சின்ன குளியலறை கட்டப்பட்டிருப்பதாக ஒப்புக் கொண்ட குமாரசாமி, அதை தனது வீட்டுக்கு கொண்டு செல்லப் போவதில்லை என்றும் கூறினார்.
கடன் தள்ளுபடி குறித்த விரிவான தகவல்கள் உள்ளன. இதற்காக கலாபுராகி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சுமார் ரூ.100 கோடி வழங்கப்படும். விவசாயிகளுக்க வழங்கப்படும் கடன் குறித்து கூட்டுறவு அமைச்சரால் முடிவு எடுக்கப்படும். யாத்கிர் கிராமத்தில், குடிநீர் பஞ்சம் உள்ளது. இதனை தீர்க்க திட்டம் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்றார்.
மேலும், ஹெரூர் கிராமத்திற்கான வருகை ரத்து செய்யப்படவில்லை, பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
அடுத்த மாதத்தில், இன்னொரு தேதி கொடுத்து, பொதுமக்களை சந்திக்கும் 'கிராமத்தில் தங்குவதற்கான திட்டத்தை' தொடருவேன் என்று தெரிவித்தார்.