புதுதில்லி: தலைநகர் தில்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்(81) இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷீலா தீட்சித் இன்று மதியம் 3.30 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். காலமான ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டு (3 முறை) தில்லி மாநில முதல்வராக பதவி வகித்தவர். அண்மையில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் தில்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டவர்.
ஷீலா தீட்சித் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
காங். மூத்த தலைவர் ஷீலா தீட்சித் மறைவுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜம்மூ-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.