புதுதில்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதியுதவி அளிக்கப்படாது என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் அ. ராஜா பேசுகையில், பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? என கேள்வி எழுப்பிய ராஜா, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுவதாக குற்றம்சாட்டி பேசினார்.
அ.ராஜாவின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதியுதவிகள் நிறுத்தி வைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக திமுகவினர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.