சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பட்டிக்குள் புகுந்த சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(70). இவர் 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் சாமிநாதன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை.
இதையடுத்து சாமிநாதன் ஆடுகளை தேடிப்பார்த்தபோது சிறிது தூரத்தில் 2 ஆடுகளும் உடலில் பாதி பாகங்களோடு இறந்து கிடந்தன. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து சாமிநாதன் உடனடியாக ஜீரகள்ளி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.