நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதி அருண் ஜேட்லி: மு.க. ஸ்டாலின் இங்கல்

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாரதீய ஜனதா கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத
நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதி அருண் ஜேட்லி: மு.க. ஸ்டாலின் இங்கல்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். 

சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அருண் ஜேட்லி இன்று பிற்பகல் 12.07 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அருண் ஜேட்லியின் மறைவையொட்டி திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜேட்லி அவர்கள் திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் 'மக்கள் தலைவர்' ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி - நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜேட்லி அவர்கள் ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.

செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையிலும் பணியாற்றி பராட்டுக்களைப் பெற்றவர்.

அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜேட்லி அவர்கள், மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.

தலைவர் கருணாநிதி மீது பெருமதிப்பும் - மரியாதையும் வைத்திருந்த ஜேட்லி அவர்கள், மூத்த வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி - நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர்.

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாரதீய ஜனதா கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சக வழக்குரைஞர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com