காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க 52 இடங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைபிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உள்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுகின்றனர்.
இதையடுத்து தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று புதன்கிழமை முதல் (ஆக 21) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 4500 தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தண்ணீர் லாரிகளுக்கு ஓரிரு நாளில் லைசென்ஸ் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க 52 இடங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.