புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை பணிகள் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட நோயாளிகள் அனைவரும் அவர்கள் இருந்த இடத்துக்கே ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு நடத்தினார். பின்னர் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தீ விபத்தால் மருத்துவமனையின் நோயாளிகள் பிரிவு பாதிக்கப்படவில்லை. ஆகையால், உயிர் சேதம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏபி விங்க் பகுதியில் இருந்த நோயாளிகள் பிற பகுதிக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அனைத்து விதமான சேவைகளும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
தீ விபத்து குறித்து உள் விசாரணைக்கு எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல் ஆகியவை குறித்தும் இந்த விசாரணையில் இடம் பெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுப்பில் இருந்த மருத்துவர்கள், தீ விபத்தால் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மருத்துவர்கள் இடைவிடாது பணியாற்றினர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், தீ யணைப்புத் துறை, தடயவியல் துறை ஆகியவற்றிடம் இருந்து அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அதன் பின்னர்தான் இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.