அத்திவரதர் பெருவிழாவில் தன்னலம் பாராமல் இரவும், பகலும் உழைத்த அனைத்து துறையினருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1 முதல் நாளை சனிக்கிழமை ஆக.17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 47-வது நாளன்று இன்று வெள்ளிக்கிழமை (ஆக.16) இரவு 9 மணியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கோயிலிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தில் தன்னலம் பாராமல் இரவும், பகலும் உழைத்த அனைத்து துறையினருக்கும் முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அத்திவரதர் வைபவத்தில் தன்னலம் பாராமல் இரவும், பகலும் உழைத்த அனைத்து துறையினருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அத்திவரதர் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்துச்சென்ற பத்திரிக்கை ஊடகத்துறையினருக்கு நன்றி. 48 நாட்களும் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்களை வரவேற்று உபசரித்த காஞ்சிபுரம் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி .
இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் தூய்மைபணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி. அவர்களின் தூய்மை பணி மெச்சத்தக்கது. மேலும் அவர்கள் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கியிருந்து துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும்.
எனது வேண்டுகோளை ஏற்று அன்னதானத்திற்கு நிதி ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஒருங்கிணைந்து இரவு பகல் பாராமல் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அத்திவரதர் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அயராது உழைத்த வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறையினருக்கு நன்றி, பாராட்டு என கூறிள்ளார்.