தொடர் கனமழை காரணமாக கடந்த 3 தினங்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் இன்று புதன்கிழமை தொடங்கியது.
அழகிய மலைகள், அடர்ந்த வனங்கள், தேயிலைத் தோட்டங்கள், அருவிகள் நிறைந்த நீலகிரி மலை ரயில் பயணமானது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சுமார் 60 கி.மீ. தூரம் கொண்டது. 108 வளைவுகள், 250 பாலங்கள், 16 குகைகள் கொண்ட மலை ரயில் பாதையில் 150 ஆண்டு காலமாக இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவி என்ஜினால் இயக்கப்படுகிறது. உதகைக்கு பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுகிறது. ஆசியாவிலேயே 19 கி.மீ. தொலைவுக்கு பல் சக்கரப் பாதையில் மலை ரயில் செல்வது இங்குதான்.
மலை ரயிலில், 37384 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி என்ஜினாக நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்குகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை - குன்னூர் இடையே காலை 9 மணிக்கு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் மலை ரயில் 3 நாட்களுக்கு (ஆக 11,12,13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீலகிரிக்கு சிறப்புச் சேர்க்கும் மலை ரயிலின் சேவை கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது.