41. ஒன்றுதான் ஆனாலும்...

ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண

ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புத் தகுதியும், கூடுதல் மதிப்பும், சிறப்பு உரிமைகளும் உண்டல்லவா? அதுபோல்தான் வேதாந்தத்தில் பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, சில சிறப்புத்தன்மைகளால் ஜீவாத்மக்களைவிட பரமாத்மா மேலானது என்று வாதிடும் தத்துவம்தான் விசிஷ்டாத்வைதம்.

விசிஷ்டாத்வைதத்தை விசிஷ்ட அத்வைதம் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அத்வைதம் என்பது இருமையற்ற ஒருமை என்பதை அறிவோம். விசிஷ்ட என்றால் விசேஷத் தன்மை வாய்ந்த, அதாவது சிறப்புத்தன்மையுடன் கூடிய என்று பொருள். ஆக, விசிஷ்டாத்வைதம் என்றால் சிறப்புடை ஒருமை என்று கூறலாம்.

பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் வேறு வேறு அல்ல, பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் ஜீவாத்மா. ஆகையால், இருப்பது பரப்பிரும்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம். விசிஷ்டாத்வைதம் இதில் இருந்து சற்று மாறுபடுகிறது. “பரமாத்மா எனப்படும் பரப்பிரும்மம்தான் அனைத்திலும் வியாபித்திருக்கிறது என்றவகையில் இரண்டும் ஒன்றே என்றபோதிலும், ஜீவாத்மாக்களைவிட மேம்பட்டதாக பரப்பிரும்மம் எப்போதும் இருப்பதால் அது சற்று வேறுபட்டது, சிறப்புடையது” என்கிறது விசிஷ்டாத்வைதம். ஆற்றில் உள்ள நீர்த்துளிகள் எல்லாம் சேர்ந்து ஆறு என்று ஒற்றைச் சொல்லில் அழைக்கப்பட்டாலும், ஆற்று நீர்த்துளியைவிட ஆறு பெரியதும், சிறப்பும் வாய்ந்தது அல்லவா? அதைப்போல்தான் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களோடு ஒன்றியிருக்கின்றபோதிலும், அவற்றில் இருந்து மேம்பட்ட தனித்தன்மை வாய்ந்த சிறப்புடையதாகவும் திகழ்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

அத்துடன், பரப்பிரும்மத்தை எவ்வித குணங்களும் அற்ற நிர்குணமாய் அத்வைதம் கூறுவதை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்குண பிரும்மத்துக்குப் பதிலாக நற்குண பிரும்மத்தை முன்வைக்கிறது. அதாவது, ஜீவாத்மாக்கள் தங்களது முக்திக்காக சகுண (நல்ல குணங்கள் நிரம்பிய) பிரும்மத்தை ஆராதிக்கலாம் என்று அத்வைதம் கூறுகிறதல்லவா, அந்த நற்குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றதாகவே பரப்பிரும்மம் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம். மேலும், அத்வைத ஆசார்யர் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகின்ற மாயாவாதத்தை விசிஷ்டாத்வைதம் அடியோடு நிராகரிக்கிறது. பிரும்மம் மட்டுமே உண்மை, உலகம் ஒரு மாயை என்பதே சங்கரரின் அத்வைதம். ஆனால், பிரும்மத்தின் ஓர் அங்கமாகிய உலகமும் உண்மைதான் என்கிறது விசிஷ்டாத்வைதம்.

பிரும்மத்தை நிர்குணமாகக் கூறுவது பிரும்மமே இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும் என்றும், இவ்வாறு கூறுவதும் உலகம் மாயை என்று மாயாவாதம் பேசுவதும் பௌத்தத்தின் தாக்கத்தால் விளைந்தது என்றும் குற்றம் சாட்டுகின்ற விசிஷ்டாத்வைத ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர், இதன் அடிப்படையில் ஸ்ரீ ஆதிசங்கரரை பிரசன்ன புத்தர் (மறைமுக புத்தர்) என்று விமரிசிக்கிறார். அக்காலத்தில், படித்தவர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற தத்துவங்களான பௌத்தம், சமணம், சாங்கியம், மீமாம்சை ஆகியவற்றை ஒருபுறம் வாதத்திறமையால் சமாளித்தும், பாமரர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து மூர்க்கத்தனம் நிரம்பியவையாக காட்சியளித்த காபாலிகம், தந்திரம் போன்றவற்றை சீர்திருத்தியும் வேத, உபநிஷதங்களின் அடிப்படையிலான வேதாந்தக் கருத்துக்கு பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனிப்பெரும் செல்வாக்கை நிலைநாட்டிய பெருமை ஆதிசங்கரரையே சாரும். இருப்பினும், அவர் வகுத்த பாதையில் சற்று பயணித்து புதிய மார்க்கங்களை பிற்கால வேதாந்திகள் உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர், விசிஷ்டாத்வைதத்தை வகுத்தளித்த ராமானுஜர்.

சங்கரரைப் போலவே, ராமானுஜரும் பிரும்மசூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். அதற்கு ஸ்ரீ பாஷ்யம் என்று பெயர். மேலும், பகவத்கீதைக்கு கீதாபாஷ்யம் என்ற தலைப்பிலான விளக்கவுரையையும், வேத – உபநிஷதக் கருத்துகளுக்கான விளக்கத்தை வேதாந்த சங்கிரஹ என்ற தலைப்பிட்டும் எழுதியுள்ளார். மேலும் வேதாந்த சார, வேதாந்த தீப, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் ஆகிய தத்துவ நூல்களையும் நித்ய கிரந்தம் என்ற வழிபாட்டுச் சடங்குகள் சார்ந்த நூலையும் இயற்றியுள்ளார்.

தனக்கு முன்பே விசிஷ்டாத்வைத ஆசார்யர்கள் இருந்ததாக வேதாந்த சங்கிரஹத்தில் ராமானுஜர் கூறுகிறார். போதாயனர், திரமிடர், தங்கர், குஹதேவர், கபர்தீ, பரூச்சி ஆகியோரை விசிஷ்டாத்வைத ஆசார்யர்களாக அவர் குறிப்பிடுகிறார். இவர்களில், போதாயனரின் உபநிஷத பாஷ்யங்கள் போதாயன விருத்தி என்ற பெயரில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், மற்றவர்களது படைப்புகள் தற்போது காணப்படவில்லை.

சங்கரரைப் போலவே உபநிஷதக் கருத்துகளையே தனது கொள்கைக்கான ஆதாரமாக ராமானுஜர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், தனது சிறப்புடை ஒருமையை (விசிஷ்டாத்வைதத்தை) நிரூபிக்க, அந்த உபநிஷதக் கருத்துகளுக்கும் நேரடியான பொருள் அன்றி சிறப்புத்தன்மை வாய்ந்த விளக்கத்தை எடுத்துரைக்கிறார்.

அந்தவகையில், அத்வைதம் சார்ந்ததாகக் கருதப்படும் உபநிஷதங்களின் முக்கியக் கருத்துகளுக்கு ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கண்ணோட்டத்தில் தரும் விளக்கங்களை தற்போது காண்போம். ‘சர்வம் கல்வ இதம் பிரும்ம’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். இதன் நேரடிப் பொருள் – ‘இவை அனைத்தும் பிரும்மமே. ராமானுஜர் தருகின்ற சிறப்புப் பொருள் – இங்கே இவை என்பது பரப்பிரும்மம் எனப்படும் ஈஸ்வரன், அதன் அறிவுடை அங்கமாக விளங்கும் அதாவது சித் பிரும்மமாக விளங்கும் ஜீவர்கள், அதன் அறிவற்ற அங்கமாக அதாவது அசித் பிரும்மமாக விளங்கும் பொருள்மய உலகம் ஆகிய மூன்றைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்ததே பிரும்மம்’ என்கிறார் ராமானுஜர். ஆக சித், அசித், ஈஸ்வரன் ஆகிய வேறுபட்ட மூன்று தத்துவங்கள் ஒன்றுபட்டிருப்பதே பிரும்மம், இந்த மூன்றுமே உண்மையானவை, எதுவுமே மாயையோ பொய்யோ அல்ல என்கிறார்.

அயம் ஆத்மா பிரும்ம’ என்பது மாண்டூக்ய உபநிஷதத்தின் மகா வாக்யம். இதன் நேரடிப் பொருள், இந்த ஆன்மாவே பிரும்மம்; அதாவது, ஆன்மாவாக எது திகழ்கிறதோ அதுவேதான் பிரும்மம் என்பதுதான். இதற்கு ராமானுஜர் தரும் சிறப்புப் பொருள் – சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்ததே பிரும்மம் என்பது விளங்கிக்கொண்டபடியால், அதாவது அனைத்துமே பிரும்மம் என்பதை அறிந்துகொண்டபடியால், ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய பிரும்மத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

சாந்தோக்ய உபநிஷதத்தின் மிகச்சிறந்த மகா வாக்கியம், தத்வமஸி (தத் த்வம் அஸி). இதன் பொருள், அது நீயேதான். இங்கு அது என்பது பிரும்மம், நீ என்பது ஜீவாத்மா. ஆக, ஜீவாத்மாதான் பரமாத்மா, இரண்டும் வேறு வேறு அல்ல என்கிறது அத்வைதம். இதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – அனைத்தின் உள்ளிருப்பாகவும் அந்தப் பிரும்மம் இருப்பதால், உனக்குள்ளும் அந்தப் பிரும்மம் இருக்கிறது என்று இதற்குப் பொருளே அன்றி, நீயே (தானே) பிரும்மம் ஆகிவிட முடியாது என்பதே. அதாவது, உயிரினங்கள் (சித் ஆகிய ஜீவர்கள்), பொருள் மய உலகம் (அசித்) ஆகியவற்றை உடலாகக் கொண்டுள்ள அந்தப் பரப்பிரும்மமே, ஒவ்வொரு ஜீவருக்குள்ளும் உள்முகமான ஆத்மாவாகவும் திகழ்கிறார் என ராமானுஜர் கூறுகிறார்.

இதேபோல் நேதி, நேதி என்ற உபநிஷதக் கருத்துக்கு இதுவன்று, இதுவன்று என்பது நேரடிப் பொருள். இதற்கு அத்வைதம் தரும் பொருள், இதுவா, இதுவா என்று தேடிக்கொண்டே போனால் எந்தவொரு விளக்கத்துக்கும் அகப்படாததே பிரும்மம் என்பதுதான். இதற்கு விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – இது மட்டுமே அன்று, இது மட்டுமே அன்று. அதாவது, பிரும்மம் என்பது இதுமட்டும்தான் என்று வகைப்படுத்திவிட முடியாது, எண்ணிலடங்கா பல குணங்களைப் பூண்டது பிரும்மம்.

இவ்வாறாக, பிரும்மம் என்பது ஒருமைதான் என்றபோதிலும், அதற்கு சித், அசித் ஆகிய விசேஷ குணங்கள் இருப்பதால் அது சிறப்புடை ஒருமை என்கிறது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். மரம் ஒன்றுதான் என்றபோதிலும், அதற்குப் பல கிளைகள் உள்ளன. இந்தக் கிளைகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை என்றபோதிலும், அவை மரம் என்ற ரீதியில் ஒன்றாகவே உள்ளன என்பதைப்போல்தான் சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்த வகையில் பிரும்மம் ஒன்றாய் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

சாங்கிய தரிசனம், பிரகிருதி, புருஷன் என்று கூறுவதைத்தான் விசிஷ்டாத்வைதம் முறையே அசித், சித் என்று கூறுகிறது. சாங்கியம் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைதம் அசித் (பிரகிருதி), சித் (புருஷன்) ஆகியவற்றுடன் ஈஸ்வரனையும் முன்னிறுத்துகிறது. சித்தும், அசித்தும் புருஷனின் இருவித வடிவங்கள், அதாவது தோற்றங்கள் என்றால், அந்தப் புருஷனின் சாராம்சமாக இருப்பதே ஈஸ்வரன் என்கிறது. அந்தப் புருஷன் நிர்குணமுடையது அல்ல, கல்யாண குணங்கள் (நற்குணங்கள்) நிரம்பியது. இதுவே புருஷனின் முதன்மைக் குணம். அது மாற்றம் இல்லாதது. அதனுடைய இரண்டாவது குணமாகிய சித், அசித் என்ற வடிவத்தில்தான் பரிணாமங்கள் (மாற்றங்கள்) தோன்றுகின்றன.

அசித் எனப்படுவது உயிரற்ற பொருள்மயமான உலகம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட அனைத்துமே சித் எனப்படும் ஜீவன்கள் ஆகும். அதாவது, ஆத்ம அறிவு கொண்ட அனைத்துமே சித், ஜீவன்கள் ஆகும். இந்த ஜீவன்கள் மூவகைப்படும். முதலாவது, ஒருபோதும் சம்சார சாகரத்தில் (பிறவிப் பெருங்கடலில்) ஆட்படாமல் எப்போதுமே சுதந்தரமாக இருப்பவை. இவற்றுக்கு நித்ய என்று பெயர். இரண்டாவது வகையைச் சேர்ந்தவை, பிறவிகளை எடுத்து, விடுதலையை அடைந்தவை. இவற்றுக்கு முக்த என்று பெயர். மூன்றாமவை, சம்சார சாகரத்தில் கட்டுண்டு கிடப்பவை. இவற்றுக்கு பத்த என்று பெயர்.

சித், அசித் ஆகியவற்றை ஆட்சி செய்வதே ஈஸ்வரன். இந்த மூன்றும் இணைந்த நிலையே பிரும்மம். அதுவே சர்வேஸ்வரன். அந்தப் பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றி, இயங்கி, மீண்டும் ஒடுங்குகிறது. முக்தி அடைவதே ஜீவன்களின் லட்சியம். அதற்கு அந்த சர்வேஸ்வரனிடம் பக்தியும், பிரபத்தியும் (சரணடைதல்) அவசியம் என்கிறார் ராமானுஜர். பிரும்மம், சர்வேஸ்வரன் என்று தான் குறிப்பிடுவது நாராயணன் எனப்படும் விஷ்ணுவே என்கிறார் அவர். அந்த விஷ்ணுவின் ஆற்றலாக (சக்தியாக) இருப்பது ஸ்ரீ எனப்படும் லக்ஷ்மி என்கிறார். ஆகையால், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ சம்பிரதாயம் என்றும் ஸ்ரீ வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பூதூரில் கி.பி. 1017-ம் ஆண்டில் தோன்றியவர் ராமானுஜர். மனிதர்களின் முழுமையான ஆயுட்காலம் என்று மதிக்கப்படும் 120 ஆண்டுகள் வாழ்ந்த பரிபூரணரான இவர், தன்னால் ஸ்ரீவைஷ்ணவத்தின் கோட்டையாக உருவாக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஜீவன்முக்தர் ஆனதாகக் கருதப்படுகிறது. (ஆயினும், ராமானுஜர் 80 ஆண்டுகள் வாழ்ந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பது ராமானுஜரின் சிலை அல்ல; பல ஆண்டுகளாகக் கெடாமல் இருக்கும் தானாகிய திருமேனி எனப்படும் ராமானுஜரின் உடலேதான் என்று கூறப்படுகிறது.

ராமானுஜர் என்ற பெயருக்கு ராமனின் தம்பி என்று பொருள். லக்ஷ்மணனுக்கு இந்தச் சிறப்புப் பெயர் உண்டு. அந்தவகையில் ராமானுஜர், லக்ஷ்மணனின் அவதாரமாகவும், அதற்கு முந்தைய ஆதிசேஷனின் அவதாரமாகவும் வைஷ்ணவர்களால் மதிக்கப்படுகிறார். வைணவ மதத்தின் தீவிர வளர்ச்சிக்கு வித்திட்ட ராமானுஜர் சைவ, வைஷ்ணவ பேதமில்லாத அத்வைதத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த பிராமண குலத்தில் வடமர் என்ற உட்சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது தந்தை பெயர் கேசவ சோமயாஜி, தாயார் பெயர் காந்திமதி (நெல்லை சங்கரன்கோவில் அம்மனின் பெயர்). ராமானுஜருக்குப் பிறகுதான், ஸ்ரீவைஷ்ணவம் தனிப்பெரும் மதப் பிரிவாக உருவெடுத்தது.

திருமணத்துக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் வேதக் கல்வி பயிலச் சென்ற ராமானுஜர், யாதவப்ரகாசர் என்ற அத்வைதியிடம்தான் பாடம் பயின்றார். ஆனால், அவர் கூறிய அத்வைதக் கருத்துகள் ராமானுஜரின் சிந்தனையோட்டத்துக்கு ஒத்துப்போகவில்லை. ஆகையால், குருவோடு முரண்பட்டு பல வாக்குவாதங்களைப் புரிந்த அவர், தானாகவே வேதங்களைப் படிக்கத் தொடங்கினார். ஸ்ரீவைஷ்ணவரும் வேதாந்தியுமான (ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களை உபயவேதாந்தி என்றே அழைத்துக்கொள்வார்கள்) யமுனாசார்யரின் கருத்துகள் ராமானுஜரைப் பெரிதும் கவர்ந்தன. பின்னர், பெரியநம்பி என்ற குருவிடம் ஸ்ரீவைஷ்ணவ தீட்சை பெற்ற ராமானுஜர், இல்லறத்தைத் துறந்து துறவியானார். பல இடங்களில் ஸ்ரீவைஷ்ணவ மடங்களை இவர் ஸ்தாபித்தார். ஸ்ரீவைஷ்ணவத் துறவிகள் பெரும்பாலும் இல்லறத்தில் இருந்து சன்யாசம் பெறுபவர்களாகவே உள்ளனர். அவர்களில் மடத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் ஜீயர்கள் எனப்படுகின்றனர். ராமானுஜருக்கு யதிராஜர் (அதாவது துறவிகளின் தலைவர்), எம்பெருமான், உடையவர் எனச் சிறப்புப் பெயர்கள் உண்டு.

ராமானுஜருக்கு முன்பே ஓரளவு விசிஷ்டாத்வைதக் கருத்துகளும், விஷ்ணு வழிபாடும் இருந்திருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி, பெரிய தத்துவமாகவும், மதமாகவும் வளர்த்த பெருமை ராமானுஜரையே சாரும். வேத காலத்தில் உபேந்திரனாக, அதாவது இந்திரனுக்குத் தம்பியாக இருந்த விஷ்ணு, பிற்காலத்தில் காக்கும் கடவுளாகவும், புருஷோத்தமனாகவும், சர்வேஸ்வரனாகவும் உயர்ந்தார். இதேபோல் ராமர், கிருஷ்ணர், பரசுராமர் உள்ளிட்ட 10 அவதாரங்கள் தவிர தத்தாத்ரேயர், சாங்கியம் தந்த கபிலர், ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபர், ஏன் புத்தரேகூட விஷ்ணுவின் 21 அவதாரங்களாகக் கருதப்படும் காலம் ஏற்பட்டது.

அதேநேரத்தில், தமிழகத்தில் மாயோன், திருமால் என்ற பெயரில் விஷ்ணு வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்துவருகிறது. (மை, மால் என்ற சொல்லுக்கு கரிய என்று பொருள். உருவகக் கடவுளான விஷ்ணு கரிய நிறம் படைத்தவராகக் கருதப்படுவதுடன், அவரது அவதாரமாக மதிக்கப்படும் கிருஷ்ணரும் கரிய நிறத்தவரே). சங்க இலக்கியமான பரிபாடலில், சேயோன் (சிவந்த நிறத்தவன்) எனப்படும் முருகனையும், மாயோன் எனப்படும் விஷ்ணுவையும் புகழ்ந்து பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பிற்காலத்தில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 வைணவ ஆழ்வார்களின் பாசுரங்களும் (நாதமுனிகள் தொகுத்த நாலாயிர திவ்யபிரபந்தம்) ராமானுஜரின் கருத்துகளுக்கு வலு சேர்த்தன.

வேத, உபநிதஷதக் கருத்துகளோடு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டமைத்தார் ராமானுஜர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமது மார்க்கத்தில் உரிய பங்களித்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் மதிக்கப்படுகிறார். ராமானுஜரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீவைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என்ற முக்கிய வேறுபாடு தோன்றியது. தமிழகத்தின் வடக்கில் உள்ள காஞ்சியைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் வழிவந்த ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் வடகலையினர் என்றும், தமிழகத்தின் தெற்கில் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிள்ளைலோகாசார்யர், மணவாள மாமுனிகள் ஆகிய ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் தென்கலையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அக்காலத்தில் மற்ற தத்துவங்களோடு கடும் விவாதம் நடைபெற்ற காஞ்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு உதவிகரமான சம்ஸ்கிருத உபநிஷதங்கள், தத்துவ நூல்களைப் பயின்றதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதேநேரத்தில், பாமரர்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் பக்தி பஜனைகள், சொற்பொழிவு ஆகியவையே கோலோச்சியதால் அதற்கு உதவிகரமான தமிழில் உள்ள ஆழ்வார் பாசுரங்களை அதிகம் பயின்று அதற்கு முக்கியத்துவம் தந்தனர். ஆகையால், வடகலையினர் வடமொழியான சம்ஸ்கிருதத்துக்கும், தென்கலையினர் தென்மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தருவது முக்கிய வேறுபாடாக உள்ளது. மேலும், தத்துவ அடிப்படையில் வடகலையினருக்கு, முக்தியை வேண்டி தன்னை இறைவனிடம் ஒப்படைக்கும் பிரபத்தி எனப்படும் சரணாகதிதான் முக்கியமானது. ஆனால் தென்கலையினருக்கோ, முக்திக்காக சரணாகதி அடைந்து இறைவனை நிர்பந்திப்பது தகாது; ஆகையால், இறைவனின் விருப்பப்படி நமக்கு எப்போது வேண்டுமானாலும் முக்தி கிடைக்கட்டும், நமக்கு அவரது நினைப்பே போதும் என்ற பக்தியே பிரதானம். வடகலையினருக்கு, விஷ்ணுவின் இணையான ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மி (திருமகள்), விஷ்ணுவைப் போலவே ஆண்டவன், பரமாத்மா, முக்திக்குப் பரிந்துரைப்பவர். ஆனால் தென்கலையினருக்கோ, மகாலக்ஷ்மி முக்திக்குப் பரிந்துரைப்பவராக இருக்கின்றபோதிலும் அவரும் ஜீவாத்மாவே, அவரே ஆண்டவன் அல்ல.

ராமானுஜரும், அவரது சீடர்களும் சைவனான இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த மேலக்கோட்டைக்குச் சென்று சிலகாலம் வாழ்ந்ததாகவும் வைஷ்ணவ இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், ராமானுஜர் முக்தியடைந்த சில காலத்துக்குப் பிறகுதான் இரண்டாம் குலோத்துங்கச் சோழன், மன்னனாகப் பட்டமேறினார் என்றும் சைவராக இருந்தாலும் அனைத்துச் சமயங்களையும் அவர் போற்றிப் பாதுகாத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாரதத்தின் வட மாநிலங்களில் பக்தி இயக்கம் - குறிப்பாக கிருஷ்ண (விஷ்ணு) பக்தி இயக்கங்கள் உருவானதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயக் கருத்துகளின் தாக்கமே பெரிதும் காரணம். வடமாநிலங்களில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஸ்ரீ ராமானந்த சம்பிரதாயம், குஜராத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஆகியவையும் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதத்தையே பின்பற்றுகின்றன. இவற்றுக்கு மாறாக, ஸ்ரீகண்டரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவ விசிஷ்டாத்வைதம் சிவனைப் பரமாத்மாவாகக் கொண்டு சற்று வித்தியாசமான விசிஷ்டாத்வைதத்தை உரைக்கிறது. (இதுபற்றி பின்னர் காண்போம்).

அதேநேரத்தில், விஷ்ணுவை பரமாத்மாவாக வரித்துக்கொண்டு, ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்றும், பக்தியின் மூலம் பரமாத்மாவின் அருளால் ஜீவாத்மா முக்தி அடைகின்றபோதிலும் பரமாத்மாவுடன் ஒன்றுபடாமல் தனித்தேதான் இருக்கும் என்றும் ஒருமையை மறுதலித்து இருமை பேசுகிறது, மத்வர் நிறுவிய துவைத தத்துவம்.

அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com