11. பரஸ்பர நிதியிருக்க பயமேன்?

பங்குச் சந்தையில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துவிட்டு, அதன் ஆதாயங்களை மட்டும் உறிஞ்சி எடுக்கப் பயன்படும் குழல்தான் பரஸ்பர நிதி முதலீடு.

பங்குச் சந்தை முதலீட்டில் ஆதாயங்கள் மிகுதியாகக் கிடைத்தாலும், அதற்கேற்ப அபாயங்களும் மிகுதியாக உள்ளன. இதில் ஆதாயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அபாயங்களைத் தவிர்த்துவிட முடியுமா? கிராமங்களில் சொல்வார்கள், ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்று. அதாவது, பெரிய மீசை வைத்துள்ள நபர் ஒருவர், மண்பானையில் உள்ள கூழை அப்படியே குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், அதேநேரத்தில் தான் ஆசையாக வளர்த்துள்ள மீசையில் கூழ் ஒட்டிக்கொண்டு அசிங்கமாகத் தெரியக் கூடாது என்றும் கருதுகிறார். இது நடக்க இயலுமா? கூழுக்கு ஆசைப்பட்டுக் குடித்தால், மீசையில் ஒட்டத்தானே செய்யும் என்ற கருத்தின் அடிப்படையில் அந்தப் பழமொழி எழுந்தது.

அதேநேரத்தில், மீசையில் ஒட்டிக்கொள்ளாமல் கூழை மட்டும் குடிக்க வழியுண்டு. எப்படி? ஓர் உறிஞ்சுகுழலைக் கொண்டு (ஸ்டிராவை கொண்டு) அந்தக் கூழை உறிஞ்சுவிட வேண்டியதுதான். அதுபோல, பங்குச் சந்தையில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துவிட்டு, அதன் ஆதாயங்களை மட்டும் உறிஞ்சி எடுக்கப் பயன்படும் குழல்தான் பரஸ்பர நிதி முதலீடு. ஆங்கிலத்தில் இதனை மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்பார்கள்.

பங்கு முதலீ்ட்டிலும் ஒரேயொரு பங்கில் மட்டுமே மொத்தப் பணத்தையும் முதலீடு செய்வதற்குப் பதில், வெவ்வேறு துறைசார்ந்த பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். இவ்வாறு முதலீடு செய்வதற்கு துறைவாரி முதலீடு (போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட்) என்று பெயர். இதற்கு, நம்மிடம் பணம் மிகுதியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு தொழில் துறை குறித்த அறிவும் மிகுதியாக இருக்க வேண்டும். இது இரண்டுமே அதிகம் இல்லை, சொற்பமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் பங்கு முதலீட்டில் இறங்கி லாபம் சம்பாதிக்க ஆசை என்றால், அதற்கு வழிவகுப்பதுதான் பரஸ்பர நிதி முதலீடு. ‘கஸாட்டா’ என்ற ஒரே வகை ஐஸ்கிரீமில் பல்வேறு சுவை கொண்ட ஐஸ்கிரீம்கள் ஒட்டுமொத்தமாகக் கிடைப்பதைப்போல, பரஸ்பர நிதி முதலீட்டு அலகு (யூனிட்) ஒன்றின் மூலம் பல்வேறுவிதமான பங்குகளில் நாம் முதலீடு செய்துவிட முடியும்.

பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் இதரவகை நிதிச் சந்தை நடவடிக்கைகளில் முதலீடு செய்ய விரும்புகின்ற, அதேநேரத்தில் குறைந்த அளவே மூலதனத் தொகை இடுகின்ற பல்வேறு முதலீட்டாளர்களின் நிதித் தொகுப்பைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுதான் பரஸ்பர நிதி முதலீடு. இதில் வரக்கூடிய ஆதாயமும் அவரவர் யூனிட் முதலீட்டுத் தொகைக்குத் தகுந்தாற்போல பரஸ்பரம் பிரித்துக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை, ஒருசில முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, அது இதேபோல் பரஸ்பரம் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இதனாலும், மற்ற வகை முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தால் இந்த இழப்பும் சரிகட்டப்பட்டுவிடும் என்பதாலும், பரஸ்பர நிதி என்பது எளிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்ற முதலீட்டுச் சாதனமாகத் திகழ்கிறது. ஏனெனில் மிகச் சிறிய முதலீட்டின் மூலம் பல்வேறு சிறந்த பங்குகளின் மீதான முதலீட்டில் கிடைக்கும் ஆதாயம் நமக்குக் கிடைப்பதுடன், அபாயங்களும் பெருமளவில் குறைக்கப்பட்டு விடுகின்றன. சாதாரண முதலீட்டாளர்களுக்கு அவர்களிடம் இல்லாத நிபுணத்துவமும், இதற்காக நேரம் ஒதுக்கி முதலீட்டைக் கண்காணிக்கும் வசதியும் பரஸ்பர நிதியை நிர்வகிப்பவர்கள் மூலமாகக் கிடைத்துவிடுகின்றன. ஆகையால், எளிய முதலீட்டாளர்களைப் பொருத்தவரை பரஸ்பர நிதி என்பது ‘ஒரே கல்லில் பல மாங்காய்’.

பரஸ்பர நிதி முதலீட்டுக்குப் பொருத்தமான குறள், ‘பெரியாரைத் துணைகோடல்’ என்ற அதிகாரத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது. அக்குறள் –

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில். (446)

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானைச் செற்றார் செயக் கிடந்தது இல் என்று பிரித்துப் படிக்க வேண்டும். அறிவிலும் ஒழுக்கத்திலும் தகுந்த இனத்தைச் சேர்ந்து அதற்கேற்ப தானும் அவற்றைக் கடைப்பிடித்து நடந்துகொள்ள வல்லவனுக்கு, செற்றார் (பகைவர்கள்) இழைக்கக் கூடிய துன்பம் என்று எதுவும் இருக்க முடியாது என்பது இக்குறளின் பொருள். பரஸ்பர நிதி முதலீடு என்பது ஓர் எளிய முதலீட்டாளருக்கு உகந்த, தகுந்த இனமாகும். பங்குகள் உள்ளிட்ட முதலீட்டுச் சந்தை சார்ந்த அறிவும், அவற்றில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் திறனும் (ஒழுக்கமும்) கொண்டவை பரஸ்பர நிதித் திட்ட நிர்வாகங்கள். ஆகையால் இத்தகு பரஸ்பர நிதி ஒன்றைச் சார்ந்து முதலீடு செய்கின்ற முதலீட்டாளர்களுக்கு, இழப்பு என்னும் பகையால் கிடைக்கக் கூடிய துன்பம் இருக்காது என்று கூறலாம்.

இங்கே பரஸ்பர நிதி என்பது பொதுவாக இத்தகைய முதலீட்டு வாய்ப்பைத் தரும் துறையைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பரஸ்பர நிதி அமைப்புகள் (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) இயங்குகின்றன. இவை அனைத்துமே பாதுகாப்பானவைதானா, பிரச்னைகள் இல்லாதவையா என்பதை குறிப்பிட்ட ஓர் அமைப்பின் அல்லது நிறுவனத்தின் பின்புலத்தை ஆராய்ந்து முதலீட்டாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதேபோல் எப்பேர்ப்பட்ட சிறந்த பரஸ்பர நிதி நிறுவனத்திலும் ஒருசில திட்டங்கள் எதிர்பார்த்த லாபம் தராமல் போகக்கூடும். எனவே, பொதுவாக பரஸ்பர நிதி முதலீடு என்பது பாதுகாப்பானது என்ற போதிலும், ஒவ்வொரு நிறுவனமும் அவற்றின் ஒவ்வொரு திட்டமும் பாதுகாப்பானவைதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இதுகுறித்து முதலீட்டாளர்கள் சற்று யோசித்து, உரியவர்களிடம் ஆலோசித்து குறிப்பிட்ட நிறுவனத்தின், குறிப்பிட்ட திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு ஆய்வு செய்ய வேண்டுமே தவிர, தேர்ந்தெடுத்து முதலீடு செய்த பிறகு அதுகுறித்து சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பது தகாது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும் (510)

என்கிறது ‘சிற்றனம் சேராமை’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் கடைசிக் குறள். ஒருவரை ஆராய்ந்து பார்க்காமலேயே இவர் சரியான நபர்தான் என்று தீர்மானித்துவிடுவதும், அதற்கு மாறாக, நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்த நபரை அடிக்கடி சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் ஒருவருக்கு தீராத துன்பத்தைத் தரும் என்று இக்குறள் எச்சரிக்கிறது. பரஸ்பர நிதி முதலீட்டிலும் அப்படித்தான். குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாகத் தெளிவடையும் வகையில் நமது ஐயங்களைப் போக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆலோசித்து முடிவெடுத்து இறங்கிய பின்னர், இடைவழியில் அத்திட்டம் குறித்து சந்தேகப்பட்டு பயங்கொள்ளலாகாது. ஏனெனில், சில நேரங்களில் பங்குச் சந்தையில் ஏற்படக்கூடிய சரிவுகள், பரஸ்பர நிதி முதலீட்டையும் சற்று பாதிப்பதுண்டு. அவற்றைக் கடந்து பரஸ்பர நிதி முதலீடுகள் பயன் தரும். ஆகையால் பொறுமை காக்க வேண்டும்.

பரஸ்பர நிதி நிறுவனமானது, குறிப்பிட்ட ஒரு திட்டத்தின் கீழ் யூனிட்டுகளை வெளியிட்டு, எண்ணற்ற முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதியை, பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் முதலீடு செய்து நிர்வகிக்கும் பரஸ்பர நிதி நிறுவனத்துக்கு அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி, அதாவது சொத்து நிர்வாக நிறுவனம் என்றும் பெயர். பல்வேறு சிறு முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு நிதிச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளே அதன் சொத்துகளாகும். திரட்டப்படும் ஒட்டுமொத்த நிதியில் குறிப்பிட்ட சதவீதத் தொகை பல்வேறு நிறுவனப் பங்குகளிலும், குறிப்பிட்ட தொகை அரசு மற்றும் இதர அமைப்புகளின் கடன்பத்திரங்களிலும், குறிப்பிட்ட தொகை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கும் பணச் சந்தை (மணி மார்க்கெட்) நடவடிக்கைகளிலும் முதலீடு செய்யப்படுகின்றன. இவ்வாறான சொத்துகளை அந்த பரஸ்பர நிதி நிறுவனம் நன்கு நிர்வகித்து, லாபம் ஈட்டி யூனிட்தாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறது.

பரஸ்பர நிதி அமைப்பானது, பல்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்குகளிலும், அரசுப் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களிலும், பணச் சந்தை எனப்படும் கடன் வழங்கல் நடவடிக்கையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப முதலீடு செய்வதற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்க நிபுணர்கள் உள்ளனர். இதற்கேற்ப பரஸ்பர நிதி அமைப்பானது, முதலீடுகளை அவ்வப்போது மாற்றி அமைத்து, முதலீடு செய்யப்படும் தொகையின் அளவைக் கூட்டி, குறைத்து பெருமளவிலான லாபம் ஈட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. பரஸ்பர நிதி அமைப்பு நாம் இடுகின்ற முதலீடுகளை நிர்வகிப்பது ஒருபுறம் இருக்கட்டும், பரஸ்பர நிதி யூனிட்டுகளில் நாம் இடுகின்ற முதலீடுகளை நாம் நமக்கேற்ப நிர்வகிக்க முடியுமா? அதற்கான வாய்ப்பையும் பரஸ்பர நிதி முதலீடு தருகிறது. அந்த வகையில் பரஸ்பர நிதி முதலீடுகளை - வளர்ச்சி சார்ந்த முதலீடு (குரோத் ஃபண்ட்), வருவாய் சார்ந்த முதலீடு (இன்கம் ஃபண்ட்) மற்றும் சமச்சீர் முதலீடு (பேலன்ஸ்டு ஃபண்ட்) என்று மூவகையாகப் பிரிக்கலாம்.

வளர்ச்சி அதாவது நமக்கு கூடுதல் ஆதாயத்தை எது தரும்? பங்குகள் சார்ந்த முதலீடுகளே அதிக லாபத்தைத் தரும். ஆகையால் குரோத் ஃபண்ட் வகை திட்டங்களில் திரட்டப்படுகின்ற முதலீடானது, பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும். இவ்வாறு பிரித்து முதலீடு செய்வது இடர்களைக் குறைக்கும். இருப்பினும் பங்குச் சந்தை என்பது எந்த அளவுக்கு ஆதாயம் மிகுந்ததோ அந்த அளவுக்கு அபாயமும் மிகுந்தது அல்லவா? ஆகையால் வளர்ச்சியைப் போலவே இதில் இடர்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அபாயங்கள் இருந்தாலும் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று கருதுவோர் இதுபோன்ற குரோத் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

அதேநேரத்தில், “அபாய வாய்ப்புள்ள முதலீடுகள் வேண்டாம், எனது முதலீட்டுக்கு நிரந்தரமாக அல்லது உத்தரவாதமான லாபம் வேண்டும்” என்று கருதுவோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கானதுதான் வருவாய் சார்ந்த இன்கம் ஃபண்ட். இத்தகு திட்டங்களில் இடப்படும் முதலீடானது, அரசுப் பத்திரங்கள் மற்றும் உத்தரவாதமாக ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டித்தொகை தரும் கடன்பத்திரங்களில் மட்டுமே மறுமுதலீடு செய்யப்படுகின்றன. இவை உத்தரவாதமான வருவாயைத் தந்தாலும் அபரிமிதமான ஆதாயத்தைத் தந்துவிடாது. ஆகையால் இடர்களை விரும்பாமல், தொடர்ச்சியான வருவாயை விரும்புவோர் இன்கம் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

குரோத் ஃபண்ட், இன்கம் ஃபண்ட் ஆகிய இரண்டுமே நேர் எதிரான தன்மை கொண்டவை. குரோத் ஃபண்ட் திட்டத்தின் பலம் அதில் கிடைக்கக்கூடிய அபரிமித லாபம்; பலவீனம் இழப்புக்கான வாய்ப்பு என்னும் அபாயம். அதேபோல் இன்கம் ஃபண்ட் திட்டத்தின் பலம் அதில் கிடைக்கக்கூடிய நிரந்தர வருவாய்; பலவீனம் கூடுதல் லாபம் கிடைக்க இயலாமை. இது எவ்வாறு உள்ளது எனில் ‘யானைக்கு நிலத்தில் பலம் ஆனால் நீரில் அபாயம்; முதலைக்கு நீரில் பலம் ஆனால் நிலத்தில் அபாயம்’ என்பதைப்போல உள்ளது. ஆகையால் இந்த விலங்குகள் எவ்வாறு தங்கள் பலம், பலவீனம் அறிந்து செயல்படுகின்றனவோ அதுபோல இத்தகு முதலீடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போர் அதனதன் பலம், பலவீனம் அறிந்து செயல்பட வேண்டும். இதனை உணர்த்துகின்ற வகையிலான குறள் ‘இடன் அறிதல்’ என்ற அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது.

கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து. (496)

வலிமையான கால் சக்கரங்களைக் கொண்டு நிலத்திலே சிறப்பாக ஓடக்கூடிய நெடிய தேர் ஆனது, கடலிலே ஓட முடியாது; அதேபோல கடலில் விரைந்து ஓடக்கூடிய நாவாய் (கப்பல்) ஆனது நிலத்திலே ஓட முடியாது என்று இக் குறளுக்குப் பொருள். ஆகையால் நாம் பயணம் மேற்கொள்ளவிருப்பது கடலில் என்றால் அதற்குரிய கப்பலைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லை நிலத்தில் என்றால் அதற்கேற்ற நெடுந்தேர் அல்லது காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுபோலத்தான் நமக்குத் தேவை அதிக ஆதாயம் என்றால் குரோத் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லை நிரந்தர வருவாய் என்றால் இன்கம் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ எனும்போது அதற்குப் பயன்படும் ஸ்டிராவைப்போல பரஸ்பர நிதித் திட்டம் இருக்கிறது என்கின்ற பட்சத்தில், ‘அதிக ஆதாயத்துக்கும் ஆசை நிரந்தர வருவாய்க்கும் ஆசை’ எனும்போது பரஸ்பர நிதித் திட்டம் கைகொடுக்காதா? என்ற கேள்வி எழலாம். அதற்கும் வழியிருக்கிறது பரஸ்பர நிதியில். ஹோவர் கிராஃப்ட் போன்ற ஆம்ஃபிபியன் ரக வாகனங்கள் நீரிலும் ஓடும், நிலத்திலும் ஓடும். அதுபோல அதிக ஆதாயமும் தரும், நிரந்தர வருவாயும் தரும் என்ற வகையிலான பரஸ்பர நிதித் திட்டம்தான் பேலன்ஸ்டு ஃபண்ட். இத்தகு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் குறிப்பிட்ட சதவீதத் தொகை நிறுவனப் பங்குகளிலும், எஞ்சிய தொகை பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. ஆகையால் இரண்டு வகையிலும் இருக்கக்கூடிய பலவீனங்களைச் சமாளித்து (பேலன்ஸ் செய்து) பலன்களை மட்டுமே தருவதால் இது சமச்சீர் திட்டம் (பேலன்ஸ்டு ஃபண்ட்) எனப்படுகிறது.

இவைபோக, பரஸ்பர நிதித் திட்டங்களை திறந்த நிலை முதலீட்டுத் திட்டம் (ஓபன் எண்ட் ஃபண்ட்), முடிந்த நிலை முதலீட்டுத் திட்டம் (குளோஸ்டு எண்ட் ஃபண்ட்) என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

முடிந்த நிலை முதலீட்டுத் திட்டம் என்பது ஏறத்தாழ ஒரு நிறுவனம் வெளியிடும் பங்கு வெளியீடு போன்றது. இத்தகைய திட்டங்கள் பொதுவாக குறிப்பிட்ட காலத்துக்குள் (பொதுவாக 3 முதல் 15 ஆண்டுகள் வரையில் இருக்கும்) முடிவடைந்துவிடக் கூடியவை. மேலும், இதுபோன்ற குளோஸ்டு எண்ட் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தினங்களுக்குள் அதில் முதலீடு செய்துவிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் இதில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. ஆகையாலும் இது முடிந்த நிலை முதலீட்டுத் திட்டம் எனப்படுகிறது. இவ்வகையில் வெளியிடப்படும் அலகுகள் (யூனிட்டுகள்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். தேவைப்படுவோர் பங்குகளை வாங்கி, விற்பதைப்போல இவற்றையும் வாங்கி விற்கலாம். விலையும் சந்தை நிலவரப்படி ஏறும், இறங்கும்.

அதேநேரத்தில் திறந்த நிலை முதலீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படும் யூனிட்டுகளில் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக முதலீடு செய்யலாம். இந்த வகையிலான யூனிட்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட மாட்டாது. பெரும்பாலான பரஸ்பர நிதித் திட்டங்கள், இதுபோன்ற ஓபன் எண்ட் யூனிட்டுகளையே வெளியிடுகின்றன.

என்.ஏ.வி.

இந்த யூனிட்டுகளை அவ்வப்போது சந்தையில் நிலவுகின்ற அவற்றின் என்.ஏ.வி. அடிப்படையில் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். என்.ஏ.வி. என்பது நெட் அஸெட் வால்யூ அதாவது நிகர சொத்து மதிப்பு என்பதன் சுருக்கம். குறிப்பிட்ட ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் உள்ள சொத்துகளின் - அதாவது அது முதலீடு செய்துள்ள பங்குகள், கடன்பத்திரங்களின் - ஒட்டுமொத்த சந்தை மதிப்பை (அவற்றுக்கு ஏதேனும் கொடுபட வேண்டிய கடன்கள் இருந்தால் அதற்கான தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள சொத்து மதிப்பை) மொத்த யூனிட்டுகளின் எண்ணிக்கையால் வகுத்தால் வருவதே நிகர சொத்து மதிப்பு. சுருக்கமாகச் சொன்னால், குறிப்பிட்ட யூனிட்டுக்கு அப்போது சந்தையில் உள்ள விற்பனை மதிப்பே என்.ஏ.வி.

சம்பந்தப்பட்ட பரஸ்பர நிதித் திட்டத்தின்கீழ் முதலீடு செய்யப்படும் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களின் சந்தை மதிப்பு அதிகரித்துச் செல்வதற்கேற்ப அதனுடைய யூனிட்டின் என்.ஏ.வி-யும் அதிகரிக்கும். உதாரணத்துக்கு ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட யூனிட் ஒன்றின் என்.ஏ.வி. மதிப்பு, குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகு, பங்குச் சந்தை ஏற்றத்தைப் பொருத்து ரூ.20, ரூ.25 ஆகக்கூட உயரக்கூடும். புதிதாக இந்த யூனிட்டுகளை வாங்க விரும்புவோர் அப்போதுள்ள என்.ஏ.வி. அடிப்படையில் இவற்றை வாங்க வேண்டும். அதேபோல் லாபத்தை அறுவடை செய்ய முதலீட்டைத் திரும்ப எடுக்க நினைத்தால், பரஸ்பர நிதி நிறுவனத்திடம் அந்த யூனிட்டுகளைத் திருப்பிக் கொடுத்து, அன்றைய தினத்தின் என்.ஏ.வி. அடிப்படையில் பணத்தைத் திரும்பப் பெறலாம். இதேபோல் குளோஸ்ட் எண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், பங்குச் சந்தையில் விலையேற்றத்தின்போது தங்கள் கைவசமுள்ள யூனிட்டுகளை விற்று லாபத்தை ஈட்டலாம்.

பொதுவாக, பரஸ்பர நிதியில் குறுகிய காலத்தில் இல்லாமல் நீண்ட காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கிறது. மேலும் பல்வேறு நீண்ட கால பரஸ்பர நிதித் திட்டங்களில் வருமான வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது. பொதுவாக இத்தகு வரிச் சலுகைத் திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்றாண்டு காலம் நமது முதலீட்டைத் திரும்ப எடுக்காமல் முதலீடு செய்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு தொகையை பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்து நீண்டகாலத்துக்குப் பிறகு எடுப்பது ஒரு வகை. இது வங்கிகளில் இடப்படும் நீண்டகால வைப்பு நிதித் திட்டம் போன்றது.

எஸ்.ஐ.பி.

அதேநேரத்தில் வங்கிகளில் இடப்படும் தொடர் வைப்பு நிதி போன்று நீண்ட காலத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்கின்ற முறைக்கு சீரான முதலீட்டுத் திட்டம் என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பர். சுருக்கமாக இதனை எஸ்.ஐ.பி. என்று அழைப்பர்.

இந்த எஸ்.ஐ.பி. திட்டத்துக்குப் பொருத்தமான குறள், ‘காலம் அறிதல்’ அதிகாரத்தில் கச்சிதமாய் இடம்பெற்றுள்ளது.

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர். (485)

ஞாலம் என்றால் உலகம் என்று பொருள். இந்த உலகமே நமக்குச் சொந்தமாக வேண்டும் என்று கருதுபவர்கள், அதற்கேற்ற காலம் வரும் வரையில் எதற்கும் கலங்காமல் பொறுமையாகக் காத்திருப்பார்கள் என்கிறார் திருவள்ளுவர். அதாவது, உரிய காலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கும் திறன் படைத்தவர்களுக்கு, உலகமே நமக்குச் சொந்தமாக வேண்டும் என்று நினைத்தாலும்கூட அது கைகூடும் என்கிறார். அதுபோல எஸ்.ஐ.பி. முறையில் குறிப்பிட்ட காலம் வரையில் பொறுமையாக தொடர்ந்து முதலீடு செய்பவர்கள், முதிர்வுக் காலத்தின்போது இந்த உலகமே நமது காலடியில் கிடப்பதைப்போன்ற மகிழ்ச்சியை அடைவார்கள். அந்த அளவுக்கு அபரிமித லாபம் கிடைக்கும்; எந்த வகையிலும் நமது முதல் மோசம் போகாது.

இந்த எஸ்.ஐ.பி. திட்டத்தை ‘சாமர்த்தியமான முதலீட்டுத் திட்டம்’ என்றும் கூறலாம். நம்மால் இயன்ற குறிப்பிட்ட தொகையை தொடர் இடைவெளிகளில் (வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை) நீண்ட காலத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்துவரும்போது, மிகப் பெரிய வளர்ச்சியை இது ஏற்படுத்துகிறது. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எஸ்.ஐ.பி. திட்டம் அமைகிறது. இந்தத் தொடர் முதலீடு என்பது இரு வகை நன்மைகளை அளிக்கிறது. ஒன்று, விலை உயர்ந்தால் லாபம் என்ற ஆதாயம்; விலை குறைந்தாலும் குறைந்த தொகையிலான கொள்முதல் என்ற ஆதாயம் என இரட்டை ஆதாயத்தைத் தருகிறது. மற்றொரு நன்மை, கூட்டு வட்டியின் மகத்துவத்தால் கிடைக்கும் வளர்வீத ஆதாயம்.

உதாரணத்துக்கு, ஒருவர் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ.24 லட்சம் முதலீடு செய்கிறார். இதற்கு ஆண்டுக்கு 7 சதவீத ஆதாயம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதன்படி வளர்வீத (கூட்டு வட்டி) முறையில் அவரது முதலீடு 20 ஆண்டுகளில் ரூ.52.4 லட்சமாக உயர்ந்திருக்கும். அதேநேரத்தில் அவர் 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 30 ஆண்டுகள் சேமிக்கிறார் என்றால், அவர் ரூ.36 லட்சம் முதலீட்டில் திரும்பப் பெறுகின்ற தொகையோ ரூ.1.22 கோடி என கூடுதலாக உயர்ந்திருக்கும். 20 ஆண்டுகளில் அவரது முதலீடு இரு மடங்குக்கு மேல் உயர்கின்ற நிலையில் 30 ஆண்டுகளில் மும்மடங்குக்கும் மேல் அதிகரிக்கிறது. இதுதான் வளர்வீத ஆதாயத்தின் மகத்துவம். ஆகையால், இளம் வயதிலேயே எஸ்.ஐ.பி. முறையில் பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குவது, பாதுகாப்புடன் பயன்களையும் அள்ளித்தரக்கூடியது.

***

துணைத் தகவல்

பரஸ்பர நிதி தோன்றிய வரலாறு

பங்குச் சந்தை வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில், அதன் அபாயங்களைத் தவிர்த்துவிட்டு, ஆதாயங்களை அடைவதற்கான பரஸ்பர நிதி என்ற நடைமுறைக்கான விதை, கடந்த 18-ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்டது. நெதர்லாந்து (ஹாலந்து) நாட்டைச் சேர்ந்த அட்ரியான் வான் கெட்விச் என்ற வர்த்தகர், பல்வேறு சிறு முதலீட்டாளர்களிடமிருந்து தொகை திரட்டி, அத் தொகையை வெவ்வேறு நிறுவனப் பங்குகளில் பகுத்து முதலீடு செய்யும் நடைமுறையை முதன்முதலாகக் கடைப்பிடித்தார். இதற்காக கடந்த 1774-இல் அவர் ஒரு முதலீட்டு அறக்கட்டளை போன்ற அமைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றைய பரஸ்பர நிதி முதலீட்டு நிறுவனங்களுக்கு முன்னோடியான சில நிறுவனங்களை, நெதர்லாந்து அரசர் முதலாம் வில்லியம், கடந்த 1822-இல் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இதேபோன்ற நிறுவனங்கள் 1849-இல் சுவிட்சர்லாந்திலும், 1880-களில் ஸ்காட்லாந்திலும் தொடங்கப்பட்டன.

பின்னர் பிரிட்டனும், பிரான்ஸும் இந்த நடைமுறையைப் பின்பற்றின. அந்நாடுகளிடமிருந்து அமெரிக்காவுக்கு இந்த நடைமுறை அறிமுகமானது. 1893-இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பாஸ்டன் பெர்சனல் பிராப்பர்டி டிரஸ்ட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந் நிறுவனம்தான், அமெரிக்காவின் முதல் குளோஸ்டு எண்ட் ஃபண்ட் திட்ட யூனிட்டுகளை வெளியிட்டது. இதனைப் பின்பற்றி ஃபிலடெல்பியாவில் அலெக்ஸாண்டர் ஃபண்ட் என்ற நிறுவனம் உதயமானது. இந் நிறுவனம் அரையாண்டுக்கு ஒருமுறை புதிய யூனிட்டுகளை வெளியிட்டதோடு, முதலீட்டாளர்கள் தேவைப்படும்போது தங்களது யூனிட்டுகளைக் கொடுத்து பணத்தைத் திரும்பப்பெறும் நடைமுறையையும் அறிமுகம் செய்தது. 1924-இல் பாஸ்டன் நகரில் தொடங்கப்பட்ட மசாசூசெட்ஸ் இன்வெஸ்டார்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பு, 1928-இல் பங்கு வெளியீட்டில் இறங்கி எம்.எஃப்.எஸ். இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. இதுதான் இன்றைய நவீன பரஸ்பர நிதி நிறுவனங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் முதல் பரஸ்பர நிதி நிறுவனம்

இந்தியாவில், தேச விடுதலைக்குப் பின் மத்திய அரசால் கடந்த 1963-இல் தொடங்கப்பட்ட யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூ.டி.ஐ.) நிறுவனம்தான், நாட்டின் முதலாவது பரஸ்பர நிதி நிறுவனம் ஆகும். 1987-ஆம் ஆண்டு வரை இந்நிறுவனமே ஏகபோகமாகத் திகழ்ந்தது. பின்னர், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளும் பரஸ்பர நிதி நிறுவனங்களைத் தொடங்கின. உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் நடவடிக்கைக்குப் பின்னர், 1993-இல் தனியார் துறையிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வகையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது தனியார் பரஸ்பர நிதி நிறுவனம் கோத்தாரி பயனீர். ஆனால் இந்நிறுவனம் பின்னர் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்துவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சுமார் 50 தனியார் பரஸ்பர நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.

பங்குச் சந்தையைப்போல பரஸ்பர நிதி நிறுவனங்களையும் ‘செபி’ எனப்படும் இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியமே கட்டுப்படுத்துகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்த, கடந்த 1996-இல் பரஸ்பர நிதி கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ‘செபி’ அறிவித்து, அமல்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com