மிச்சமெல்லாம் உச்சம் தொடு

அத்தியாயம் - 29

விஞ்ஞானி வெ. பொன்ராஜ்

புறம் தள்ளாதீர்கள்.. அறிவியல் ஆராய்ச்சிகளை!

இந்தியாவில் வருடம்தோறும் ரூ.30,000 கோடி மதிப்புள்ள வேளாண்மைப் பயிர்கள், பூச்சிகளால் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 200-க்கும் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இது பூச்சிகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அமெரிக்காவில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் உருவாகும் உடல்நலக் குறைபாடு ஒரு பெரிய பிரச்னை.

பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவாக உருவான கேன்சரை மருத்துவ மேலாண்மை செய்வதற்கு, அவசர சிகிச்சைக்கு மற்றும் உயிரிழப்பிற்கு ஆகும் தொகை ஆண்டுக்கு US$200 மில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்தின் விளைவாக தலைவலியில் ஆரம்பித்து, மனஉளைச்சல், நினைவிழத்தல், பார்க்கின்சன், அல்ஸைமர் போன்ற வியாதிகள் வருகின்றன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதைச் சுவாசித்தாலும், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் உடல்நலக் கேட்டையும், மரணத்தையும் பரிசாகக் கொடுக்கின்றன.

நேஷனல் கிரைம் ரிக்கார்டு பீரோ (NCRB) அளித்த தகவல்களின்படி, 2015-இல் கிட்டத்தட்ட 7,060 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை செடிகளுக்கு அடித்ததின் பக்கவிளைவுகளால் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை 30 முதல் 60 நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் இதை இன்னும் உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளினால், பாதிக்கப்படுகிறார்கள் அல்லது மரணமடைகிறார்கள். ஆனால் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் பக்கவிளைவில் இருந்து மக்களைக் காக்கும் மரபணு மாற்றுப் பயிர்களால் யாரேனும் புற்றுநோயாலோ, ஒவ்வாமையினாலோ மரணமடைந்தார்கள் என்றும் மலட்டுத்தன்மை அடைந்தார்கள் என்றும் இந்தியா மட்டும் அல்ல, உலகத்தில் இதுவரை ஆதாரப்பூர்வமாக, ஆராய்ச்சி முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மரபணு மாற்றுப் பயிர் அறிமுகப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் ஒரே ஒரு கணவனும், மனைவியும், தங்களுக்கு வந்த கேன்சருக்கு காரணம் மான்சான்டோ கம்பெனியின் ரவுண்ட் அப் களைக்கொல்லியில் இருக்கும் கிளைபோசேட் 30 ஆண்டுகள் பயன்படுத்தியதால்தான் ஏற்பட்டது என்று கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுத்து $2 பில்லியன் அபராதத்தை மான்சான்டோ கம்பெனிக்கு விதித்தது. அது அதிகம் என்று அதே நீதிமன்றம் $86.7 மில்லியனாகக் குறைத்தது, இதை எதிர்த்து மான்சான்டோ கிளைபோசேட்டினால் கேன்சர் வரும் என்பதை ஏற்க முடியாது என்று இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதைக் காரணமாகக் காட்டி மான்சான்டோவின் கிளைபோசேட் மரபணுவிற்கு ஜெர்மனி தடை விதித்துவிட்டு, அந்த நாடுதானே மரபணு மாற்று ஆராய்ச்சியைத் தொடர பட்ஜெட் ஒதுக்கி செயல்படுகிறது. இதை பல்வேறு நாடுகள் தொடர்கின்றன.

அதாவது பூச்சிக்கொல்லியால் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாட்டிலும் சாகிறார்கள். அவர்கள் உயிருக்கு எவ்வித மதிப்பும் இல்லை. ஆனால் நிரூபிக்கப்படாத தகவலை வைத்து அமெரிக்காவில் இவ்வளவு அதிகம் அபராதம் விதிக்கமுடியும் என்றால், அங்கு ஆராய்ச்சிக்கும் மதிப்பு உண்டு, அதன் விளைவால் ஆபத்து வந்தால் அதற்கு அபராதமும் மிக அதிகமாக இருக்கும் எனும் போது, அங்கு அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற பயமாவது வரும். மரபணு மாற்றுப் பயிருக்கு எதிராக இன்னமும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து, அதற்கு எதிர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. நன்மையும், ஆபத்தும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்திலும் உண்டு. அதைக் கண்காணித்து மக்களைப் பாதிக்காத வகையில் நம் ஆராய்ச்சி இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மனித உடல் நலத்திற்கு 20 வகையான முக்கிய அமினோ அமிலங்கள் தேவை. இறைச்சியில் இந்த 20 வகையான அமினோ அமிலங்கள் மற்றும் தேவையான புரதங்கள் ஒட்டுமொத்தமாக இருக்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து இந்த புரதம் கிடைக்க வேண்டும் என்றால் பருப்பு மற்றும் பல்வேறு தானியங்களைக் கலந்து சாப்பிடுவதின் மூலம்தான் தேவையான புரதமும், அமினோ அமிலங்களும் கிடைக்கும்.

நாம் மாமிசம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறைதான் சாப்பிடுவோம். ஆனால் பருப்பு தினம்தோறும் சாப்பிடுவோம். நமக்குத் தேவையான புரதம் பெரும்பாலும் பருப்பிலிருந்துதான் கிடைக்கும். அதிலிருந்து இரண்டு அமினோ அமிலங்கள் அளவு குறைவாக இருக்கும். ஆனால் மாமிசம் சாப்பிடும்போது அந்த அமினோ அமிலங்கள் தேவையான அளவு இருக்கும்.

ஓர் ஆராய்ச்சி செய்யும்போது எந்த பருப்பு வகைகளில் சிஸ்டைன், மெத்தியோனைன் போன்ற சல்பர் அமினோ அமிலம் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ததில் ‘பிரேசில் நட்’ என்ற கடலை வகையில் ஆல்புமின் என்ற புரதத்தில் சிஸ்டைன், மெத்தியோனைன், சல்பர் அமினோ ஆசிட் அமிலம் அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இந்த ஆல்புமின் புரதம் மாமிசத்தில் கிடைக்கும் புரதம்போல் சமஅளவில் கிடைக்கிறது.

பிரேசில் நட் தென்அமெரிக்காவில் பெர்தோலேசியா எக்செல்சா அல்லது பிரேசில் நட் மரத்தில் இருந்து கிடைக்கும் ஒருவித கடலையாகும். இந்தக் கடலையில் இருந்து நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் அதிகமான செலினியம் மினரல் கிடைக்கிறது. செலினியம் தாதுவில் உடலில் உள்ள மாசுகளை வெளியேற்ற உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். மாசுகள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப்படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இது டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் சிஸ்டைன், மெத்தியோனைன் போன்ற சல்பர் அமினோ அமிலம் பிரேசில் நட்டின் புரதத்தில் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த ஆல்புமின் புரதத்தை எடுத்து சோயாபீன்ஸில் சேர்த்தால் மாமிசத்திற்கு இணையான புரதம் இதில் கிடைக்கும் என்று சிந்தித்தார்கள், இந்த புரதத்தை சோயாபீன்ஸில் மரபணு மாற்றி சல்பர் அமினோ ஆசிட் அதிகமாக இருக்கும் வகையில் ஒரு சோயாபீன்ஸை உருவாக்கினார்கள்.

பின்பு என்ன தெரியவந்தது என்றால் பிரேசில் நட்ஸ் சாப்பிடுவர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே அலர்ஜி வந்தது. ஆனால் பிரேசில் நட்ஸில் இருந்து எடுக்கப்பட்ட ஆல்புமின் மரபணு மாற்றப்பட்ட ஜி.எம் சோயாபீன்ஸ் இருக்கும் புரதத்தில் மாற்றப்பட்டதால் அலர்ஜி வந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஏற்கெனவே நாம் பார்த்தபடி, இந்த மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் 3 ஆய்வு நிலைகளில் ஒரு நிலையில் ஒவ்வாமை ஒரு சிலருக்கு வந்தது என்று கண்டறிந்தவுடன் பிரேசில் நட்ஸ் புரதத்தால் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸைத் தடை செய்துவிட்டார்கள்.

எனவே, இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் சரியாக கட்டமைக்கப்பட்டிருப்பதால், எங்காவது ஆபத்து இருக்கிறது என்பது ஆய்வுப்பூர்வமாகக் கண்டறியப்பட்டால், அதை தடுத்து நிறுத்திக்கொள்ள இயலும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் அறிவியலை தெளிவாக நம்பிக்கையோடு அறிவியல் வரைமுறைப்படி செய்தோம் என்றால் அறிவியல் ஆராய்ச்சியின் பயன்பாடுகள் நமக்கு கிடைக்கும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சீத் பிளைட் வியாதி (Sheath Blight Disease) என்ற வியாதியால் நெல்லின் உற்பத்தி திறன் 20 முதல் 25 சதவீதம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பூஞ்சை நோய். பொதுவாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தாவரங்களில் எதிர்ப்புத்திறன் கொண்ட மரபணுக்கள் இருக்கும். ஆனால் இந்த நோயை எதிர்க்கக்கூடிய மரபணு நெல்லில் இல்லை. தண்ணீர் அதிகமாக தேங்கும்போது நெல்லைப் பாதிக்கும் பூஞ்சை நோய் வரும். 25 வருடத்திற்கு முன்பாக இந்த ஆராய்ச்சியை நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக இருந்தபோது, டாக்டர் வேலுத்தம்பியின் தலைமையில் தொடங்கப்பட்டது. தாவரங்களில் anti-fungal புரோட்டீன்கள் நிறைய இருக்கின்றன; இதை அதிக அளவில் நெல்லில் இருக்கும்படி உருவாக்கினால், அந்த சீத் பிளைட் வியாதியை நெல்லில் குறைக்க முடியுமா என்பதுதான் டாக்டர் வேலுத்தம்பியின் ஆராய்ச்சி. அதனால் அந்த மரபணுவை எடுத்து அதிக அளவில் எம்ஆர்ஐ வரும்படி அதற்கு ஒரு மரபணு மாற்றம் பண்ணி நெல்லை உற்பத்தி செய்தார்கள். இதில் 100% fungus resistance வராது. ஆனால் 50% அந்த நோயிலிருந்து காக்கும்படியாக உருவாக்க முடிந்தது. கடலோர தமிழ்நாடு ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் அதிகமாக இந்த பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்பு அதிகமானது.

இந்த நெல் வகைகளை வெள்ளை பொன்னியில் உருவாக்கிய பின்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரைஸ் ரிசர்ச் - ஹைதராபாத் இதை எடுத்து கிராஃப்ட் மூலம் ஆந்திர பிரதேசத்தில் நன்கு வளரக்கூடிய இரண்டு நிலைகளில் ஹைபிரிட் முறையில் பூஞ்சையைத் தாங்கி வளரக்கூடிய சக்தியுடன், ஆந்திராவில் பரவலாகப் பயிரிடப்பட கூடிய நெல் வகைகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி பரீட்சார்த்தமாகச் சோதித்தார்கள். 100 டன் நெல் கிடைக்கும் இடத்தில் வெள்ளத்தால் பூஞ்சை நோய் மூலம் 20 சதவிகிதம் அழிவதற்குப் பதிலாக, இந்த மரபணு மாற்றப்பட்ட நிலையில் இப்போது 90 டன் ஆக அந்த நெல் பூஞ்சைக்காளானைத் தாங்கி வளரக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இருந்து கள ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் சூழலியல் ஆய்வு செய்து முழுமையான பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் இன்னும் பத்து வருடமாகும். ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்படவேண்டி இருக்கிறது. இன்றைக்கு 900 ரகங்கள் இந்தியா முழுவதும் இது கலப்பினம் ஆராய்ச்சி மூலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கேன்சர் வரும் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் வராது என்று நம்பி சொல்வதற்கு 30 ஆண்டுகால ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

15 வருடத்திற்கு முன்பு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆராய்ச்சி வல்லுநர்கள் இருந்தார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் எப்போது பி.டி. கத்திரிக்காய்க்கு தடைவிதிக்கப்பட்டதோ, அதன் பின்பு மாணவர்களுக்கு இந்த உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடு குறைந்துவிட்டது. இந்த மரபணு மாற்று ஆராய்ச்சி துறையில் நுணுக்கம் தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்கள். நுணுக்கம் தெரிந்தவர்கள் வேலை இல்லாமல்போய், இந்தத் துறை கிட்டத்தட்ட அழியும் நிலையில் வந்திருக்கிறது. எதையும் உருவாக்குவதற்கு அறிவும் மதிநுட்பமும் வேண்டும், அழிப்பதற்கு பயத்தை உருவாக்கினால் போதும்.

மறுபடியும் இந்தத் துறையை சேர்ந்த விஞ்ஞானிகளைக் கண்டுபிடிப்பது, அவர்களை உருவாக்குவது என்பதற்கெல்லாம் இன்னும் ஓர் இருபது வருடமாகும், இப்போதே நாம் பின் தங்கிவிட்டோம். இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மக்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும் என்றால் தவறான செய்திகளின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கக் கூடாது. பொய்யான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்காமல் இருந்தால்தான் இந்தியாவில் ஆராய்ச்சி சிறக்கும். இல்லையென்றால் கற்காலத்துக்கு மக்களை அழைத்துச் சென்றவர்களாவோம்.

எனவே, மக்களது வாழ்வு வளமானதாக வேண்டும் என்றால் அறிவார்ந்து சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT