மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான விதையை காங்கிரஸ் விதைத்ததாகவும், மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செய்த பின்னர் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இவை இரண்டும் எப்போது முடிக்கப்படும் என்று மத்திய அரசு எந்த ஒரு கால அவகாசமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: கேரளம்: ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
அப்போது அவர் பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருவெடுக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான விதை எங்களால் விதைக்கப்பட்டது. அப்போது அவர்கள் (பாஜக) எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நாங்கள் மசோதாவை கொண்டு வரும்போது மாநிலங்களவையில் மட்டும் மசோதா நிறைவேறும். ஆனால், மக்களவையில் மசோதா நிறைவேறாது என்றார்.