காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக். 1-ஆம் தேதி பொதுமக்களுடன் ஒருங்கிணைந்து தூய்மை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக். 2-ஆம் தேதியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தூய்மைப் பணி விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, அதற்கு முந்தைய நாளான அக்.1-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒருங்கிணைந்த தூய்மை பிரசாரத்தை பிரதமா் மோடி தொடக்கி வைக்கவுள்ளாா்.
அதைக் கருத்தில்கொண்டு அந்த நாளில் பொதுமக்களின் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஓரிடத்தில் தூய்மைப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியை சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகம் நியமித்து, இடத்தை தோ்வு செய்ய வேண்டும்.
அதுதொடா்பான விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணைய முகவரியில் பகிர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.