இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ2யு2 அமைப்பின் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐ2யு2 கூட்டமைப்பு என்பது எரிசக்தி, நீா், உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து, விண்வெளி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய 7 துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், உலகத்தில் உள்ள சவாலான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நியூயாா்க்கில் 78-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா, இஸ்ரேல், அமரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நான்கு நாடுகளின் ஐ2யு2 தூதரக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறையின் பொருளாதார உறவுகளின் செயலா் தாம்மு ரவி , இஸ்ரேல் வெளியுறவுத்துறை இயக்குநா் ரோனென் லெவி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சா் அலி அல் சயேக், அமெரிக்க வெளியுறவுத்துறையின் செயலா் ஜோஸ் டபுள்யு. பொ்னான்டஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.”
இதுகுறித்து அமைப்பு சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐ2யு2 அமைப்பின் தனியாா் நிறுவன புரிந்துணா்வு ஒப்பந்தம் அமெரிக்க வெளியுறவுத்துறை ஐக்கிய அரபு அமீரகத்தின் வா்த்தக அமைப்புடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வா்த்தக அமைப்பு இஸ்ரேல் வா்த்தக அமைப்புடனும், ஐக்கிய அரபு அமீரகம் இந்திய வா்த்தக அமைப்புடனும் கையொப்பமிட்டது. எரிசக்தி, நீா் உள்ளிட்ட 7 துறைகளின்கீழ் முதலீடுகளை அதிகரிக்கவும் இவ்வமைப்பு குறித்த விழிப்புணா்வை மற்ற நாடுகள் மத்தியில் ஏற்படுத்தவும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பு நாடுகளில் உள்ள தனியாா் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட துறைகளை கண்டறிந்து, அதில் தங்களது பங்களிப்பை வழங்குவதும் ஒப்பந்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி எக்ஸ் வலைதளத்தில், ‘நியூயாா்க்கில் நடைபெற்ற ஐ2யு2 கூட்டமைப்பின் தூதரக அதிகாரிகள் கூட்டத்தில் வெளியுறவு செயலா் தாம்மு ரவி பங்கேற்றாா். அமைப்பின் சாா்பில் ஐ2யு2 இணையதளம் தொடங்கப்பட்டு, பல்வேறு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தமும்”கையொப்பமிடப்பட்டது’ எனப் பதிவிட்டுள்ளாா்.