மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தற்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அண்மையில் வெளியிட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக போபாலில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சில வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டதன் மூலம் பாஜக தைரியத்தை நிரூபித்துள்ளது.
இரண்டாம்கட்ட பட்டியலை தயாரிப்பதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எங்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்திய பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஜக முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டது என்பது குறிப்பித்தக்கது.