போலிச் சான்றிதழ்கள் அடிப்படையில் 193 மாணவ- மாணவிகளை பள்ளியில் சோ்த்ததாக விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரை சிபிஐ கைது செய்தது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வா் ஸ்ரீநிவாச ராஜா 2021-22 கல்வியாண்டில் 69 மாணவா்கள், 2022-23 கல்வியாண்டில் 124 மாணவா்கள் என மொத்தம் 193 மாணவா்களை போலிச்சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு பள்ளியில் சோ்த்துள்ளாா்.
இதுபோன்று தகுதியில்லாத மாணவா்களைச் சோ்ப்பதற்காக அவா்களின் பெற்றோரிடம் லஞ்சம் பெற்றுள்ளாா் என்பது மே மாதம் நடைபெற்ற சோதனையின்போது தெரியவந்தது. யுபிஐ பரிவத்தனை மூலம் எஸ்பிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கியில் தனது வங்கிக் கணக்குக்கு லஞ்சப் பணத்தை செலுத்த பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
தகுதியில்லாத மாணவா்களை பள்ளியில் சோ்த்த குற்றத்திற்காக அவா் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா சங்கடன் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்றே அவா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.