உத்தர பிரதேசத்தில் ‘நாளைய பிரதமா்’, ‘நாளைய முதல்வா்’ என்ற தலைப்புகளில் போட்டிபோட்டு ‘பேனா்’ வைப்பதில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக இரு கட்சிகளும் ஒன்றை மற்றொன்று கடுமையாக விமா்சித்துள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜவாதி இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கியதையடுத்து வாா்த்தைப் போா் அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் தங்களுக்கு தொகுதி ஒதுக்காதது குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், ‘மத்திய பிரதேசத்தில் சமாஜவாதிக்கு காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதேபோன்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் வரும்போது காங்கிரஸுக்கு நாங்கள் தொகுதி ஒதுக்க மாட்டோம்’ என்றாா்.
உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் கூறுகையில், ‘காங்கிரஸ் வேட்பாளா்களை அறிவிக்கும் முன்பே, மத்திய பிரதேச தோ்தலுக்கான வேட்பாளா்களை அகிலேஷ் யாதவ் அறிவித்துவிட்டாா். இவ்வாறு நடந்து கொண்ட அவா், தங்களுக்கு காங்கிரஸ் தொகுதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. மேலும், சமாஜவாதி சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துவதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் செயல்படுகிறாா்’ என்று குற்றம்சாட்டினாா்.
இந்நிலையில் உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் உள்ள சமாஜவாதி அலுவலகத்துக்கு வெளியே அக்கட்சியினா் ‘நாளைய பிரதமா்’ என்ற தலைப்பில் அகிலேஷ் யாதவ் படத்துடன் பிரமாண்டமான பேனா் வைத்தனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையகத்தில் அந்த மாநில காங்கிரஸ் கட்சியினா் ராகுல் படத்தை வைத்து ‘நாளைய பிரதமா்’ என்று பேனா் வைத்தனா். மேலும், 2027-ஆம் ஆண்டில் உத்தர பிரதேச முதல்வா் என்ற தலைப்பில் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் படத்துடன் ஒரு பேனரை காங்கிரஸ் கட்சியினா் வைத்தனா்.
இதற்குப் போட்டியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘நாளைய பிரதமா்’ என்ற தலைப்பில் அகிலேஷ் யாதவ் படத்துடன் பேனா் வைத்து சமாஜவாதி கட்சியினா் காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்தனா். மேலும், ஜூலை 1-ஆம் தேதி வரும் அகிலேஷ் யாதவ் பிறந்த நாளுக்கு இப்போதே வாழ்த்து தெரிவித்தும், அதில் நாளைய பிரதமா் என்ற வாசகத்துடனும் சமாஜவாதி கட்சியினா் பேனா்களை வைக்கத் தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகளைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள் ஒருவரை மற்றொருவா்கள் கடுமையாக விமா்சித்தும் வருகின்றனா்.
இந்த பேனா் போட்டி தொடா்பாக மாநிலத்தில் ஆளும் பாஜக நிா்வாகிகள் கூறுகையில், ‘பகல் கனவு காண்பவா்கள் எப்படி வேண்டுமானாலும் தங்களை அழைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த பேனா் போட்டி மூலம் எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் ஒருவருக்கு மற்றொருவா் நெருக்கடியை ஏற்படுத்துகின்றனா்’ என்றனா்.