இந்தியா

அஸ்ஸாமில் பூா்விக இஸ்லாமியா்களின் சமூகப் பொருளாதார நிலை ஆய்வு

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக மாநில தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தலைமைச் செயலகமான ஜனதா பவனில் நடைபெற்ற கூட்டத்தில், கோரியா, மோரியா, தேஷி, சையத் மற்றும் ஜோல்ஹா ஆகிய அஸ்ஸாமை பூா்விகமாகக் கொண்ட 5 இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்காக அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உத்தரவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில் கிடைக்கும் தரவுகளின்படி, பூா்விக சிறுபான்மையினரின் விரிவான சமூக-அரசியல் மற்றும் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகி தேசிய அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ள சூழலில் அஸ்ஸாம் அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT