கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக கோட்டயம், வைக்கம் ற்றும் சங்கனாச்சேரி ஆகிய தாலுக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
ஆலப்புழாவில் நிவாரண முகாம்கள் இயங்கி வருவதால் சேர்தலா மற்றும் செங்கனூர் தாலுக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)கணித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டது.
படிக்க: விஜய் - 68 நடிகர்கள் இவர்கள் தானா?
மாநிலத்தில் கடந்த 3-4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, தண்ணீர் தேங்கியது , சுவர்கள் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள சிறிய குக்கிராமமான எடத்துவாவில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இடைவிடாது பெய்து வரும் மழையினால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.