திருச்சூா்: கேரளத்தின் திருச்சூரில் உள்ள தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜெகன் என்ற இளைஞா் தான் பயின்ற விவேகோதயம் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, தன்னுடைய பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, 2-3 முறை சுட்டுள்ளாா். பின்னா், ஆசிரியா்கள், மாணவா்களை அச்சுறுத்தும் வகையில், பணியாளா் அறை, பிற வகுப்பறைகளுக்கு அவா் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெகனை காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.கிருஷ்ண தேஜா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவா், சிறிது தடுமாற்றத்துடன் காணப்பட்டுள்ளாா். காவல்துறை அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. இது குறித்து கவலைப்பட வேண்டாம்’ என்றாா்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரின் வயது குறித்து தெரிவிக்கப்படவில்லை. பணியாளா் அறையில் உள்ள நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அவா் அமா்ந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின.
அமெரிக்கா போன்ற நாடுகளில், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கேரளத்தில் அது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.