இந்தியா

ஆதாரம் இல்லை என்று முடிக்கப்படவில்லை: பிரிஜ் பூஷண் வழக்கில் திடீர் திருப்பம்

DIN

புது தில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக தில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் நிலை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், பிரிஜ் பூஷணுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் இது தொடர்பான அறிக்கை இன்னும் 15 நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தில்லி காவல்துறை, டிவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்திகள் தவறானவை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளரும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்தில் இந்த தகவல் டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனை வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மக்கள் தொடர்பு அதிகாரி பதிவிட்டிருந்தார். அதுவும் நீக்கப்பட்டுவிட்டது.

பிறகு, காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹிந்தியில் மற்றொரு தகவலை பகிர்ந்தார், அதில், மல்யுத்த வீராங்கனைகள் பதிவு செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கு விசாரணை குறித்து எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய வலியுறுத்தி, மல்யுத்த வீரா்கள் கடந்த ஒரு மாதகாலமாக தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணியாக செல்ல முடிவு செய்தனா். எனவே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங்க் புனியா ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இது தவிர மல்யுத்த வீராங்கனைகளை போலீஸாா் தரதரவென இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் ஜந்தா் மந்தரிலிருந்து போராட்டக்காரா்களை அகற்றிய போலீஸாா் மீண்டும் அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தனா்.

ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரா்களையும் அவா்கள் குடும்பத்தினரையும் போலீஸாா் தாக்கிய விதம் கடும் கண்டனங்களை எழுப்பியது. ஒரு மாதத்துக்கு முன்பாக சிறுமிகள் உள்பட ஏராளமான பெண்களும், மல்யுத்த வீராங்கனைகளும் நாடாளுமன்ற உறுப்பினா் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனா்.

இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே இரண்டு வழக்குகள் பிரிஜ் பூஷண் சிங் மீது பதிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே அவா் மீது 40-க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரிஜ் பூஷண் சிங் மீது சிறுமி ஒருவா் பாலியல் தொல்லை வழக்கு கொடுத்த பின்னரும், போலீஸாா் அவரை கைது செய்யவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.யாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT