மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். அவா்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சாா்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் அண்மையில் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக, முதல்வா் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.