இந்தியா

நண்பா நானும் வருகிறேன்.. உயிர்த் தோழனுடன் உடன்கட்டை ஏறியவர் பலி

29th May 2023 01:41 PM

ADVERTISEMENT


ஆக்ரா: தனது சிறுவயதிலிருந்து உயிர்த்தோழனாக இருந்தவரின் மரணத்தால் நிலைகுலைந்துபோன 42 வயது நபர், நண்பரின் இறுதிச் சடங்கின்போது, எரியும் தகனமேடையில் உடன்கட்டை ஏறியதில் 90 சதவீத தீக்காயம் அடைந்து பலியானார்.

ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையோரம் நடந்த இறுதிச் சடங்கின்போது, எரிந்துகொண்டிருந்த உடல் மீது ஒருவர் ஓடிச்சென்று குதித்ததில், அவரது உடலில் 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில், அவர் செல்லும் வழியிலேயே பலியானார்.

இது குறித்து ஃபிரோஸாபாத் காவல்துறையினர் கூறுகையில், அசோக் குமார் லோதி (44) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது நெருங்கிய நண்பர் கௌரவ் ராஜ்புத்தும் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்தார்.

இறுதிச்சடங்கின்போது, அசோக் குமாரின் உடல் எரியூட்டப்பட்டதும் அவரது உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் கௌரவ் நண்பா.. நானும் வருகிறேன் என்று கத்திக்கொண்டே எரிந்துகொண்டிருந்த தகனமேடையில் குதித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பலியானார்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து பலியான கௌரவின் சகோதரர் கூறுகையில், இவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரே பள்ளிக்குச் சென்றனர். இசைக் கருவிகளை இசைத்து பலரையும் மகிழ்ச்சியடைய வைப்பார்கள். ஒருவருடைய கஷ்டத்தை மற்றவர் ஏற்றுக்கொள்வார். இவர்களுடைய பிள்ளைகளைக் கூட ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்கள். புற்றுநோய் கண்டறியப்பட்டதும், கௌரவ்தான் அதற்கான செலவுகளை செய்துவந்தான் என்கிறார்.

இதுவரை சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT