அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் வலுவான நிதித்துறை செயல்பாடுகள் காங்கிரஸின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் இந்த வலுவான நிலை காங்கிரஸின் திட்டங்களை வலுவிலக்கச் செய்து நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைத்த காங்கிரஸின் சதித் திட்டத்தினை வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாரம்பரியம், கலாசாரத்தை காங்கிரஸ் ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? அமித் ஷா
இது தொடர்பாக பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் கூறிக் கொண்டாலும், அவர்கள் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். மார்ச் காலாண்டில் எல்ஐசியின் லாபம் ரூ.13,428 கோடியாக உள்ளது. இது 466 சதவிகிதம் அதிக வளர்ச்சியாகும். அதேபோல 2022-23 ஆம் ஆண்டில் எஸ்பிஐ-ன் லாபம் ரூ.50,232 கோடியாக உள்ளது. இது 58 சதவிகிதம் அதிக வளர்ச்சியாகும். காங்கிரஸ் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக தங்களது எதிர்மறையான தாக்குதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், பொதுத் துறை நிறுவனங்களின் வலுவான வளர்ச்சி அவர்களது சதித்திட்டங்களை வெளியில் கொண்டு வந்து விடுகிறது என்றார்.