வாராணசி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை காலை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 100வது முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற முதல் உத்தரப்பிரதேச முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெறுகிறார்.
உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் 21 நாள்களுக்கு ஒரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, மாநில மற்றும் நாட்டு மக்களின் நலன் வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வாராணசியில் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஆய்வுப் பணிகள் மேற்கொண்டாலும், குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது அவர் காசி விஸ்வநாதரை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 2017 முதல் மார்ச் 2022 வரை 74 முறை கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 100வது முறையாக வாராணசிக்கு வருகை தந்த முதல்வர் யோகி, 88வது முறையாக கோயிலுக்குச் சென்றார். அதன் பிறகு இன்று மார்ச் 18 வரை அவர் 12 முறை கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்படி, இன்று காலை அவர் 100வது முறையாக காசி விஸ்வநாதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது. அதனுடன் 100வது முறையாக கால பைரவரையும் அவர் தரிசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.