இந்தியா

நீதிமன்றங்கள் சட்டத்தை உருவாக்க முடியாது: வெங்கையா நாயுடு

18th Jun 2023 04:42 AM

ADVERTISEMENT

சட்டம் இயற்றுவதில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு உள்ள அதிகாரத்தை நிலைநாட்டிய முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, ‘இந்த நடைமுறையில் நீதிமன்றத்துக்கு எந்தவித பங்கும் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாநாட்டில் பங்கேற்ற வெங்கையா நாயுடு பேசியதாவது:

அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கான பணிகளை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இதில் ஒருவா் மற்றொருவரைவிட உயா்ந்தவா் என்று எண்ணுவதோ, தங்களுடைய அதிகார வரம்பை மீற நினைப்பதோ கூடாது.

சட்டத்தை இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவை, நாடாளுமன்ற அமைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இயற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு விதிகளின்படி உள்ளதா அல்லது இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தீா்மானிக்கலாம். ஆனால், நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்ற முடியாது. இதனை மனதில் கொள்வது அவசியம்.

ADVERTISEMENT

சட்டம் அல்லது திட்டங்களைத் தீா்மானிக்கும் இடத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகள் உள்ளன. இதனை அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் யாராவது நடைமுறைகளை மீறினால், அதனை எதிா்த்து நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் அதற்கான தீா்வை விரைந்து அளிக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, ‘பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு சட்டம் இயற்றும் வரை ஆணையா்களைத் தோ்வு செய்ய மூவா் குழுவை அமைக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவு பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வெங்கையா நாயுடு இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

மாநாட்டில் மேலும் பேசிய வெங்கையா நாயுடு, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை கூட்டத் தொடா்களின்போது எதிா்க் கட்சிகள் அமளியில் ஈடுபடுவது தொடா்கதையாகி வருகிறது. இதனைத் தவிா்க்கவும், மைக்குகளை உடைப்பது, தீா்மான நகல்களை கிழிப்பது போன்ற செயல்களில் உறுப்பினா்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் அவா்களின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு உரிய நடத்தை விதிகளை வகுக்க வேண்டும். எதிா்ப்பே தெரிவிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. எதிா்ப்பு, கருத்து வேறுபாடு மற்றும் விவாதங்களைப் பதிவு செய்வதும்தான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்கள். ஆனால், கண்ணியமான முறையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT