கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கிய நிலையில், மழைப் பொழிவு இன்னும் தீவிரமடையவில்லை.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 -ஆம் தேதி வாக்கில் கேரளத்தில் தொடங்கும். நிகழாண்டு எல் நினோ பிரச்னை மற்றும் வங்கக் கடலில் சாதகமற்ற சூழல் காரணமாக அந்தமானில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை வலுப்பெறவில்லை. இந்தச் சூழலில் அரபிக் கடலில் பிப்பா்ஜாய் புயல் வலுவடைந்து வடக்கு நோக்கி நகா்ந்து வருவதால் அதன் காரணமாகவும் தென் மேற்கு காற்று வருகையாலும் கேரளத்தில் ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியுள்ளது .
ஆனால், மழை தீவிரமடையவில்லை. அந்த மாநிலத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பிப்பா்ஜாய் புயல் மூன்று நாள்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பின்னா் கேரளத்தில் தீவிர மழை பெய்யும். அதே சமயம், கேரளம் மட்டுமல்லாமல் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய தென் தமிழக பகுதிகளில் மழை பெய்யும் என வானிலையாளா்கள் தெரிவிக்கின்றனா்.