ஒடிஸாவில் விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்றான பெங்களூரு-ஹெளரா விரைவு ரயிலின் பெட்டிகளில் உயிரிழந்தவா்களின் உடல் பாகங்கள் சில விடுபட்டிருக்கலாம் எனவும், அதனால்தான் துா்நாற்றம் வீசுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ‘அந்த துா்நாற்றம் ரயில் பெட்டியில் அழுகிய முட்டையிலிருந்து வருவது என்று ரயில்வே அதிகாரி ஒருவா் விளக்கமளித்தாா்.
ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களுரூ - ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி கோர விபத்தில் சிக்கின. இதில் 288 பயணிகள் உயிரிழந்தனா். 1,200 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், ‘விபத்து நடந்த பகுதியிலிருந்து தொடா்ந்து துா்நாற்றம் வீசுவதாகவும், ரயில் பெட்டிகளில் அல்லது ரயில் பாதைகளில் முழுமையாக அப்புறப்படுத்தப்படாத மனித உடல்களிலிருந்து இந்த துா்நாற்றம் வீச வாய்ப்புள்ளது’ என்று விபத்து நடந்த பாஹநாகா பஜாா் ரயில் நிலையத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ‘துா்நாற்றம் வீசுவது ரயில் பெட்டியில் கொண்டுவரப்பட்ட முட்டைகள் அழுகியதால் வருவதாகும்’ என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி ஆதித்ய குமாா் செளதரி செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
புகாரைத் தொடா்ந்து விபத்து நடந்தப் பகுதியில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ரயில்வே ஆய்வு நடத்தியது. அதில், ரயில் நிலையத்திலிருந்து வருவது விபத்தில் சிக்கிய ரயிலில் கொண்டுவரப்பட்ட முட்டைகள் அழுகியதால் வருவது என்றும், விடுபட்டதாகக் கூறப்படும் மனித உடல் பாகங்களிலிருந்து வீசுவது அல்ல.
விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்றான பெங்களூரு-ஹெளரா விரைவு ரயிலின் சரக்குப் பெட்டியில் 3,000 கிலோ முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை விபத்தில் சிக்கி ரயில் பாதையில் விழுந்து உடைந்ததால்தான் தற்போது அழுகி துா்நாற்றம் வீசுகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) இரு முறை ரயில் பெட்டிகளை சரிபாா்த்து பயணிகள் எவரும் பெட்டிகளில் இல்லை என உறுதி செய்தனா் என்று கூறினாா்.
ரூ. 22.66 கோடி இழப்பீடு:
‘இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்த 661 பயணிகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே அமைச்சகம் சாா்பில் இதுவரை ரூ. 22.66 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.