புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்களில் 123 பேரின் உடல்களுக்கும் உடல் கூறாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் 60 சுகாதாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், கிட்டத்தட்ட 24 மணி நேரமும் பணியாற்றி, சவக்கிடங்கில் இருந்த 123 உடல்களுக்கும் உடல்கூறாய்வு செய்து முடித்துள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டவர்களில் பலரும் தலையில் ஏற்பட்ட காயத்தாலும், காயத்தால் ரத்தப்போக்கு அதிகரித்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் பலியானதாக உடல்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அடையாளம் காணப்படாத 100 பேரின் உடல்களுக்கு மரபணு சோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உடல்கள் வரத்தொடங்கியது ஞாயிற்றுக்கிழமை காலை முதல். உடல் கூறாய்வு செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று முடிந்துள்ளது.
30 மருத்துவர்கள், 20 துணை மருத்துவர்கள், உதவியாளர்கள் என 60க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இதில் 20 உடல்களை உறவினர்கள் பெற்றுச்சென்றுவிட்டனர். இன்னமும் 52 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. இங்கு 33 உடல்களை வைக்க மட்டுமே இடவசதி உள்ளது. எனவே, இதற்காக சிறப்பு கண்டெய்னகர்ள் வரவழைக்கப்பட்டு உடல்கள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள்.