தில்லி: மணிப்பூர் கலவரத்துக்கு நீதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
மணிப்பூரில் பெரும்பான்மையுடைய மைதேயி இனத்தவா்களை மாநிலத்தின் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கலாம் என மாா்ச் 27-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீா்ப்பு குகி, நாகா பழங்குடியினா் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தலைநகா் இம்பாலில் மைதேயி மற்றும் பழங்குடி மக்களுக்கு இடையே வெடித்த கலவரம், மாநிலம் முழுவதும் பரவியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.
தொடர்ந்து, ராணுவம் குவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தி பல நாள்களுக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டு பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென்று தில்லியில் உள்ள அமித் ஷாவின் வீட்டு முன்பு கூடிய குகி இனப் பெண்கள், நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அமித் ஷா வீட்டின் முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.