ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஒடிசா கோர ரயில் விபத்து நடந்த மறுதினமே மம்தா பானர்ஜி நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் இன்று காயமடைந்தவர்களை சந்திக்க ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கண் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளுக்குச் சென்று நோயாளிகளுடன் உரையாடினார். மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
படிக்க: நகம் அடிக்கடி உடைகிறதா? அதற்குக் காரணம் இதுதான்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை கவனித்துக்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் குழுக்கள் விபத்து நடந்த தினமே அனுப்பப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், மேற்கு வங்கத்தில் காயமடைந்த 57 பேர் எஸ்சிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சிலர் கை, கால்கள் இழந்தும், ஒரு சிலர் கண்களை இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இதெல்லாம் வார்த்தைகளின் மூலம் விவரிக்க முடியாது என்றார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பயணிகள் இதுவரை இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
படிக்க: கோடைக்காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 காய்கறிகள்!
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.