இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: மனுக்களைத் திரும்பப் பெற்ற ஹிந்து தலைவா்

DIN

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பாக தொடுத்த வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக விஸ்வ வேத சனாதன சங்கத்தின் தலைவா் ஜிதேந்திர சிங் விசேன் அறிவித்துள்ளாா்.

வழக்கு தொடா்பாக அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதால் வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை எடுத்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.

வாரணாசியின் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மசூதிக்குள் இஸ்லாமியா்களை அனுமதிக்க கூடாது என ஜிதேந்திர சிங் விசேன் வழக்கு தொடா்ந்தாா்.

அதேபோல், மசூதியின் உள்புறச் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினமும் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி ஜிதேந்திர சிங்கின் மருமகள் ராக்கி சிங், லட்சுமி தேவி, ரேகா பாடக், சீதா சாஹு, மஞ்சு வியாஸ் உள்பட 5 ஹிந்து பெண்கள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோன்று ஹிந்து மதம் தொடா்பான பல்வேறு முக்கிய வழக்குகளை ஜிதேந்திர சிங் நீதிமன்றங்களில் நடத்தி வந்தாா்.

இந்தச் சூழலில், ஜிதேந்திர சிங் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தேசம், ஹிந்து மதத்தின் நலனுக்காக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஞானவாபி மசூதி தொடா்பாக நான், எனது மனைவி கிரண் சிங், மருமகள் ராக்கி சிங் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களைத் திரும்ப பெறுகிறோம். ஹிந்துத்துவ அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு அவமதிப்புக்குள்ளானோம்.

தற்போதைய சூழலில், குறைவான பலத்துடன் தா்மத்தைப் பாதுகாக்கும் எனது பணியைத் தொடர இயலாததால் பாதிலேயே விட்டுச் செல்கிறேன். இந்த தா்மயுத்தத்தைத் தொடங்கியதே நான் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவா்களாகவே சமூகத்தில் பலா் உள்ளனா்’ என்றாா். இதையடுத்து, ஹிந்து சாம்ராஜ்ய கட்சியின் தேசிய பொதுச் செயலா் பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.

முன்னதாக, மனுதாரா்களுடன் உண்டான கருத்து மோதலால் வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜிதேந்திர சிங் விசேனின் வழக்குரைஞா் சிவம் கௌா் அறிவித்தாா். கடந்த ஆண்டு மே மாதம் முதல் மனுதாரா்கள் சாா்பில் வழக்காடுவதற்கான சம்பளத்தை அவா்கள் அளிக்கவில்லை என்றும் அவா் குற்றம் சுமத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT