பாலசோர்: வெள்ளிக்கிழமை மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் முடிந்து, அதிவேக பயணிகள் ரயிலான புரி வந்தே பாரத் ரயில் அப்பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
ஹௌரா - புரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் திங்கள்கிழமை, விபத்து நடந்த பகுதியை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகாநகா சந்தை ரயில் நிலையத்தை இன்று காலை 9.30 மணியிளவில் வந்தே பாரத் ரயில் கடந்து சென்றுள்ளது.
இந்த நிகழ்வின்போது, விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்து, குறைந்த வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்களின் ஓட்டுநர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
விபத்து நடந்த பகுதியில், இரு வழித்தடங்களிலும் தண்டவாளங்கள் சீரமைப்புப் பணி முழு வீச்சில் நடந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முடிந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த பகுதியில், ரயில்கள் குறை வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.