இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 7 பேரைக் காணவில்லை

4th Jun 2023 11:38 AM

ADVERTISEMENT

 

பாலசோரில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஒடிசா சென்றுள்ள தமிழக குழு தெரிவித்துள்ளது.

கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

ADVERTISEMENT

படிக்க 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர். 

இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படிக்கஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை செல்லவிருந்த கோரமண்டல் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பயணித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அறிந்து உதவ தமிழகத்திலிருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது. 

அதன்படி, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 294 பேர் தனி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். 

இந்நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களில் 7 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாகனி கோபி, கார்த்தி, ரகுநாத், மீனா, கமல், கல்பனா, அருண், ஜெகதீசன் ஆகிய 8 பேரை காணவில்லை. அதில் ஒரு பெண் மட்டும் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். மற்ற 7 பேர் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 044 - 28593990, 9445869843 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT