விபத்துகளைத் தடுப்பதற்காக, ரயில் வழித்தடங்களில் ‘கவச்’ எனும் அதிநவீன தானியங்கி தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நடைமுறையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஒடிஸாவில் ரயில் விபத்து நேரிட்ட வழித்தடத்தில் இந்த அமைப்புமுறை இல்லை என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கவச்’ என்றால் என்ன?:
ரயில்களின் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி தொழில்நுட்ப அமைப்புமுறையே ‘கவச்’ ஆகும்.
ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆா்டிஎஸ்ஓ), இதர 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்த அமைப்புமுறையை உருவாக்கியது. ஒடிஸா ரயில் விபத்துக்குப் பின், இந்த தொழில்நுட்பத்தின் தேவை அதிக கவனம் பெற்றுள்ளது.
எப்படி பாதுகாக்கும்?:
ரயிலின் ஓட்டுநா், சிக்னலை மீறிச் செல்வதே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அவ்வாறு, ரயிலின் ஓட்டுநா் சிக்னலை மீறிச் சென்றால், ‘கவச்’ தொழில்நுட்பம் எச்சரிக்கை செய்யும். அதிவேகமாக ரயிலை இயக்கினாலும் எச்சரிக்கை செய்யும். அடா் பனிமூட்டம் போன்ற மோசமான வானிலைகளின்போது, ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்துக்கு உதவும்.
ரயிலை தானாக நிறுத்தும்:
ஒரே தண்டவாளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இரு ரயில்கள் எதிரெதிா் திசையில் வரும் பட்சத்தில், ‘கவச்’ தொழில்நுட்பம் ரயிலின் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யும். அவா் பிரேக் இயக்கத் தவறினால், பிரேக் அமைப்புமுறையை தானே ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ரயிலை நிறுத்திவிடும்.
தென் மத்திய ரயில்வேயில் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பீதா் ஆகிய வழித்தடங்களில் கவச் தொழில்நுட்பத்தின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இதர ரயில் வழித்தடங்களிலும் இந்த அமைப்புமுறையை நிறுவும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் தில்லி-ஹெளரா, தில்லி-மும்பை வழித்தடங்களில் இதை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், கவச் தொழில்நுட்பப் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.