ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு - ஹௌரா அதிவிரைவு ரயில், ஷாலிமர்-சென்னை சென்டிரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின.
இந்திய ரயில்வே வரலாற்றில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.
விபத்து நடந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
ரயில் தண்டவாளங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.
ஏராளமான உடல்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி உருகுலைந்து காணப்படுகின்றன.
விபத்தில் சிக்கிய ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், பலி மற்றும் காயமடைந்தவர்கள் அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் முடிந்ததையடுத்து, ரயில்பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி துரிதகதியில் தொடங்கியிருக்கிறது.