புதுதில்லி: ஒடிசா கோர ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதபடுத்தி கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்த கோர விபத்து எப்படி நடந்தது. மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரணம் விவரங்கள் உள்ளிட்டவற்றை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து நடந்த பாஹாநாகா பஜார் ரயில் நிலைய ஆய்வுக்கு பின்னர், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.