அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்ட விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 261ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.